Skip to main content

ஆளுங்கட்சியினர் தலையீடு! போராடும் வியாபாரிகள்!!!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020

 

Erode - Market - ADMK -merchant

 

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்று ஒவ்வொரு ஊரிலும் உள்ள காய்கறி சந்தைதான். கரோனோ நோய் தொற்று பரவல் ஏற்பட்டதிலிருந்து பெரும்பாலான ஊர்களில் உள்ள காய்கறி மார்கெட், தற்காலிகமாக அந்தந்த ஊர்களின் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.


அப்படித்தான், ஈரோடு காந்திஜி  சாலையில் இயங்கி வந்த நேதாஜி காய்கறி சந்தை ஈரோடு பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு பேருந்துகள் பெரும்பாலும் இயங்க தொடங்கியதும், பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மார்கெட் அடுத்ததாக ஈரோடு வ.ஊ.சி. பூங்கா மைதானத்தில் மீண்டும் தற்காலிகமாக இயங்க வ.ஊ.சி. பூங்காவில், கடைகளுக்கான செட் அமைக்கப்பட்டது. 

அதன் பணிகளும் முடிவுற்று நாளை முதல் அங்கு செயல்படும் என ஈரோடு மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி அமைப்பும் அறிவித்தது.  இந்த காய்கறி சந்தையில் காய்கறிகள் விற்பனை கடைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் பழைய நேதாஜி மார்கெட்டில் ஆப்பிள், மாதுளை, உள்ளிட்ட பழ வகைகள் வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு இந்த வ.உ.சி பூங்கா மைதானத்தில் கடைகள் ஒதுக்கப்படவில்லை. இதை கண்டித்து இன்று 250 க்கும் மேற்பட்ட  பழ வியாபாரிகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 


மேலும் அவர்கள் மாநகராட்சி அலுவலக  தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து  மாநகராட்சி அதிகாரிகள்  பழ வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடைகள் ஒதுக்கப்படும் என உறுதி கொடுத்தனர். பிறகு பழ வியாபாரிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது பற்றி நம்மிடம் பேசிய, வணிகர் சங்க பேரமைப்பு ஈரோடு மாவட்ட செயலாளரும், நேதாஜி பழ வியாபாரிகள் சங்க தலைவருமான ஆர்.கே.சண்முகவேல்,  "நாங்கள் கடந்த 50 வருடங்களாக இந்த நேதாஜி தினசரி மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்து வருகிறோம். இந்த நிலையில் கரோனா பாதிப்பு பிரச்சனையால் நேதாஜி சந்தை மூடப்பட்டு, தற்காலிகமாக அது பஸ் நிலையம் சென்றது. திரும்பவும் இப்போது வ.உ.சி. பூங்கா மைதானத்திற்கு திரும்பியுள்ளது. 

 

nakkheeran app



இந்த நிலையில் காய்கறி வியாபாரிகளுக்கு மட்டும் அங்கே வியாபாரம் செய்யலாம், பழ வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாது என கூறப்பட்டது. ஆளுங்கட்சியினர் தலையீட்டால்தான் பழ வியாபாரிகள் வியாபாரம் செய்ய கடைகள் ஒதுக்கப்படவில்லை. இதனை கண்டித்துதான் இன்று நாங்கள் போராட்டம் நடத்தினோம். அதிகாரிகள் கடை நடத்த இடம் தருவதாக கூறியிருக்கிறார்கள்.

அப்படி தரவில்லை என்றால் வருகிற நாட்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகம் முன்பும் முற்றுகை போராட்டத்தை நடத்துவோம். தொடர்ந்து அவர்கள் கடை கொடுக்க மறுத்தால் மூடப்பட்ட நேதாஜி தினசரி சந்தைக்கே நாங்கள் செல்வோம். ஆளுங்கட்சியினர் சுயநல போக்கோடு வியாபாரிகளின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். அதிகாரிகளும் இதற்கு துணை போவது வேதனையாக உள்ளது. எங்களது உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்" என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.