
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்து சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி தேசியநெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி எதிர்ப்புறமாக வந்த லாரி மீது நேருக்கு நேராக மோதியது. இதில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை பத்திரமாக மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து ராசிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகளுக்கு அவதி ஏற்பட்டது.