Skip to main content

அரசியலில் இன்னுமொரு 50 ஆண்டு காலத்திற்கு துருவ நட்சத்திரம் ஸ்டாலின்தான் - துரைமுருகன் பேச்சு!!

Published on 16/12/2018 | Edited on 16/12/2018

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் வெண்கல திருவுருவச் சிலையை திறந்து வைத்த பிறகு மெரினாவில் உள்ள கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பல முக்கிய தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். அந்த மலரஞ்சலி நிகழ்விற்குப் பிறகு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் துரைமுருகன் வரவேற்புரையாற்றினார் அந்த உரையில்,

 

d

 

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமை பீடமான அண்ணா அறிவாலயத்தில் நம்முடைய மாபெரும் தலைவர் கலைஞருடைய திருவுருவச் சிலையை திறந்து வைத்து அதற்கு பிறகு இங்கே அவரைக் குறித்து புகழ் பேரணி பாடுவதற்காக வருகை தந்துள்ளனர். இந்த மாபெரும் விழாவிற்கு தலைமை ஏற்று வழிநடத்த இருக்கிறவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின்.

 

 

திராவிட முன்னேற்ற கழகத்தை வழி நடத்துவதற்கு தலைவர் இல்லையே என்ற ஏக்கம் எவருக்கும் ஏற்படாவண்ணம் அண்ணாவுடைய அரவணைப்பும்,  கலைஞருடைய கருணை கண்டிப்பும் கொண்டு இந்த இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவதிலும் சரி, எதிரிகள் நம்மை வீழ்த்துவதற்காக வகுக்கின்ற வியூகங்களை தலைவரிடம் அவர் கற்ற ராஜதந்திர முறைகளைக் கொண்டு உடைத்து எரிவதிலும் சரி, சட்டமன்றத்தில் கேள்வி என்ற சரணங்களை சரமாரியாக தொடுப்பதிலும் சரி, மந்திரிகளை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நிறுத்தி அவர்களை தோலுரித்து காட்டுவதிலும் சரி, தோழமை கட்சி தலைவர்கள் தூய அன்பு காட்டி அரவணைத்து செல்வதிலும் சரி, எல்லாவற்றுக்கும் மேலாக அன்னை சோனியா இடத்திலே ஒரு பிள்ளையாக மாறி இருப்பதும் சரி, தன்னிகரில்லா தலைவராக விளங்கக் கூடியவர் நமது ஸ்டாலின்.

 

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு விடிவெள்ளியாய் தோன்றி ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கி கொண்டிருக்கிறார் ஸ்டாலின். என்னுடைய அரசியல் கணக்குப்படி அகில இந்திய அரசியலில் இன்னுமொரு 50 ஆண்டு காலத்திற்கு துருவ நட்சத்திரமாக இருந்து ஒளிரக்கூடியவர் நம்முடைய தலைவர் ஸ்டாலின். எனவே எங்களை மட்டும் அல்ல, இயக்கத்தை மட்டுமல்ல நாளைய தமிழகத்தையே வழிநடத்துபவர் நம் ஸ்டாலின்.

 

 

அண்ணா அறிவாலயத்தில் அவருடைய திருவுருவச் சிலையை திறந்து வைத்து கடற்கரைக்குச் சென்று தலைவர் நினைவிடத்தில் நினைவஞ்சலி செலுத்தி விட்டு இப்பொழுது தலைவருக்கு புகழ் அஞ்சலி செலுத்துவதற்காக இங்கே வந்து அமர்ந்து இருக்கிறவர் காங்கிரஸ் கட்சியினுடைய நாடாளுமன்ற  தலைவர், இன்று ஆளுங்கட்சிக்கு சிம்மசொப்பனமாக இருக்க கூடியவர். இந்தியாவில் இருக்கக்கூடிய அத்தனை அரசியல் கட்சிகளும் ஒரு உயிர்மூச்சாக இருக்ககூடியவரான நம்முடைய சோனியா காந்தி அம்மையார் அவர்கள் அவருடைய திருவுருவச் சிலையை திறந்து வைத்தது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்