Skip to main content

“நிலைமை விபரீதமாகும்” - ஒன்றிய அரசை எச்சரிக்கும் துரை வைகோ

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

 Durai Vaiko  speech in trichy

 

காவிரி உரிமை பிரச்சனையில் தமிழர் உரிமை காக்கப்பட வேண்டும் என்று கூறி ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் மதிமுகவினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய துரை வைகோ, “காவிரி டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த தஞ்சை மண்டலம் தான் தரணிக்கே சோறு போடுகின்றது. எங்கு பார்த்தாலும் பசுமை போர்த்திய சோலையாக காட்சி தரும் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் நிலை என்ன? தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் இன்று பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கும் அவல நிலையில் இருக்கிறது.

 

காவிரி டெல்டா மாவட்டங்களில் 30 இலட்சம் ஏக்கராக இருந்த பாசன பரப்பு  தற்போது 15 இலட்சம் ஏக்கராக குறைந்து விட்டது. பாதிக்கு பாதி நிலம் மட்டுமல்ல. பாதிக்கும் மேற்பட்ட மக்களும் விவசாயத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு வந்துவிட்டார்கள். ஆனால் கர்நாடகாவில், முன்பு இருந்ததை விட தற்போது விவசாய பாசனப் பரப்பு 4 மடங்காகக் கூடிவிட்டது. 

 

'நடந்தாய் வாழி காவேரி' என்கிறது சிலப்பதிகாரம். காவிரியில் தண்ணீர் நடந்து அல்ல, தவழ்ந்து கூட வரவில்லை. இதற்கு காரணமான ஒன்றிய பாஜக அரசை இக்கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வழங்க மறுக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசைக் கண்டிக்கிறேன்.

 

கர்நாடகாவில், தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தரக்கூடாது எனப் போராடும் பாஜகவையும் இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கண்டிக்கிறேன். காவிரியில் தமிழகத்திற்கு உரிமையான நீரைப் பெறுவதற்கு நாம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாகப் போராடி வந்திருக்கிறோம். நீண்ட காலம் சட்டப் போராட்டம் நடத்தியிருக்கிறோம். பல உயிரிழப்புகளை சந்தித்து இருக்கிறோம். உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று போராடியும் தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பையும் கர்நாடகம் மதிப்பது இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் சொல்வதையும் கர்நாடகம் பொருட்படுத்துவது இல்லை.

 

மழைக் காலங்களில் கர்நாடக மாநிலத்தில் எல்லா அணைகளும் நிரம்பிய பிறகு, எஞ்சிய உபரி நீரை மட்டுமே காவிரியில் திறந்து விடுகிறார்கள். வெள்ளப் பெருக்கு காலங்களில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க காவிரியை ஒரு வடிகாலாக கர்நாடக அரசு பயன்படுத்தி வருகின்றது. வெள்ளம் வரும்போது, அணைகள் நிரம்பும் போது தண்ணீரைத் திறந்து விடுவது பெரிய விசயம் அல்ல. வறட்சி காலங்களில் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது தான் மிக முக்கியம். 

 

அந்தந்த மாநில நதிகள் அந்தந்த மாநிலங்களுக்கே சொந்தமானவை என நீங்கள் கருதினால். நீங்கள் தண்ணீர் தர மறுத்தால், ஒன்றிய அரசு அதை கைக்கட்டி வேடிக்கை பார்க்குமானால் நிலைமை விபரீதமாகும். 

 

காவிரி விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போன்றவர்கள் தமிழக அரசைக் குற்றம் சாட்டி, தமிழ்நாட்டின் ஏழை விவசாயிகளின் பிரச்சனையில் அரசியல் செய்து வருகின்றார்கள். ஒன்றிய பாஜகவையோ, கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பாஜக கட்சியையோ அவர்கள் ஒருநாளும் விமர்சிப்பது இல்லை” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.