Skip to main content

தி.மு.க. வட்டச் செயலாளர் வெட்டிப் படுகொலை!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

dmk party leader incident police investigation

 

சென்னை மடிப்பாக்கத்தில் தி.மு.க. வட்டச் செயலாளர் செல்வம் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 

 

சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் செல்வம். 38 வயதாகும் இவர் நேற்று (01/02/2022) இரவு 09.00 மணியளவில் ராஜாஜி நகர் பிரதான சாலையில் தனது ஆதரவாளர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆறு பேர் கொண்ட கும்பல், அவரை வெட்டி விட்டு இரு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்றது. உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். 

 

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மடிப்பாக்கம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பிரதே பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வம் கொல்லப்பட்டதால், ஏற்பட்ட பதற்றம் காரணமாக மடிப்பாக்கம் பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

188- வது வார்டு தி.மு.க. வட்டச் செயலாளரான செல்வம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனது மனைவியைப் போட்டியிட வைக்க தேவையான ஏற்பாடுகளைத் தீவிரமாக செய்து வந்த நிலையில், கொலை செய்யப்பட்டுள்ளார். 

 

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மறுபுறம் ரியல் எஸ்டேட் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

செல்வம் மறைவிற்கு தி.மு.க. நிர்வாகிகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தென்சென்னை தொகுதியின் மக்களவை உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, சோழிங்கநல்லூர் - மடிப்பாக்கம், 188-வது வட்டச் செயலாளர் செல்வம் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நாடாளுமன்ற தேர்தலில், நான் வேட்பாளராக போட்டியிட்ட போது, கழகத்தின் வெற்றிக்காக அவர்‌ ஆற்றிய அளப்பரிய பணி என் கண்முன் வந்து செல்கின்றது, கழக நிகழ்ச்சிகளை அப்பகுதியில் முன்னின்று, சிறப்பாக நடத்தக்கூடிய உழைப்பாளி. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.