Skip to main content

''டிஜிட்டல் விவசாயம் முதல் முதல்வரின் சூரிய பம்புசெட் திட்டம் வரை'' - தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23

Published on 19/03/2022 | Edited on 19/03/2022

 

'' From Digital Agriculture to the Chief Minister's Solar Pumpset Project '' - Tamil Nadu Agriculture Budget 2022-23

 

நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்திற்குப் பின் வரும் மார்ச் 24ஆம் தேதி வரை பேரவையை நடத்த முடிவு செய்யப்பட்டது. இன்று நடப்பாண்டிற்கான வேளாண் பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

 

அதன்படி, 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டின் திருந்திய மதிப்பீடு 32,775.78 கோடி ரூபாய். தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்னை, மா, வாழை, கொய்யா தோட்டங்களில் ஊடு பயிருக்காக 27.51 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பசுமைக்குடில், நிழல்வலைக்கூடம், நிலப்போர்வை ஹைட்ரோபோனிக்ஸ் தொழில்நுட்பங்களுக்கு 25.9 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின் இணைப்பு வழங்கப்பட தாட்கோ பயனாளிகளுக்கு நுண்ணீர் பாசன வசதி அமைக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தக்காளி சாகுபடிக்கு 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு, கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு, சர்க்கரை ஆலையை நவீனமயமாக்க 4.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு, கரும்பு ஊக்கத்தொகை டன்னுக்கு 195 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை, திருச்சியில் எஞ்சிய நச்சு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜெட்கோவிற்கு 5,157.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

தேனீ வளர்ப்பிற்கு 10.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூண்டு சாகுபடியை உயர்த்த ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் தர 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்துகிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

அரசு மாணவர், மாணவியர் விடுதிகளில் காய்கறி மற்றும் பழத்தோட்டங்கள் அமைக்கப்படும். இது விவசாயம், ஊட்டசத்து குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ள உதவும். சூரியகாந்தி, சோயா பீன்ஸ்க்கு கூடுதல் சிறப்பு கவனம் செலுத்தி எண்ணெய் வித்துக்களை ஊக்குவிக்க 29.7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கருப்பட்டி உள்ளிட்ட பனை சார்ந்த மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்திக்கு 75 சதவிகித மானியம் உதவி வழங்கப்படும். தமிழகத்தில் சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும். 8 கோடியில் டிஜிட்டல் விவசாய திட்டம் அறிமுகம் செய்யப்படும். இதனால் விதை முதல் விளைச்சல் வரை அனைத்து தொழில்நுட்பமும் விவசாயிகளுக்கு மின்னணுவகையில் கிடைக்க வழிசெய்யும்.

 

சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலையில் துவரை உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழுக்கள், சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க 30.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் சூரிய பம்பு செட் அமைக்கும் திட்டத்தின் கீழ் 70 சதவிகித மானியத்துடன் 3 ஆயிரம் பம்பு செட் அமைக்கப்படும். சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர், வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைக் கொண்டு முதல் சிறுதானிய மண்டலமும், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைக் கொண்டு இரண்டாவது சிறுதானிய மண்டலமும் உருவாக்கப்படும். 7.5 லட்சம் மானாவாரி நிலங்கள் பயன்பெற 132 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கு சிறப்பு நிதியாக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 50 உழவர் சந்தைகளைச் சீரமைக்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 உழவர் சந்தைகள் அமைக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டந்தோறும் உழவர் சந்தையில் மாலைவேளையில் சிறு தானியங்கள் விற்க அனுமதி வழங்கப்படும். காய்கறிகளில் பாரம்பரிய ரகங்களை மீட்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பனைமரம் மேம்பாட்டிற்காக 2.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் விளைபொருட்களுக்கு உரிய விலை பெறுவதை உறுதி செய்ய விவசாய பொருட்களுக்கான தொழிற்பேட்டை உருவாக்கப்படும். 

 

அயிரை, செல் கெண்டை, கல்பாசு உள்ளிட்ட உள்நாட்டு மீன் வகைகள் வளர்ப்பை ஊக்குவிக்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பம்பு செட்டுகளை தூரத்தில் இருந்தே  கைப்பேசி மூலம் இயக்க உதவிடும் தானியங்கி கருவிகளுக்கு 5,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இரவில் பம்பு செட்டுகளை இயக்க செல்லும் விவசாயிகள் பாம்பு கடியில் இருந்து தப்பிக்க இத்திட்டம் உதவும். மிளகு, காஃபி கொட்டைகளைத் தரம்பிரிக்கும் மையங்கள் நீலகிரியில் அமைக்கப்படும். திண்டிவனம், தேனி, மணப்பாறையில் 381 கோடி ரூபாய் செலவில் 3 உணவுப்பூங்காக்கள் அமைக்கப்படும். 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 தொழில் கற்கும் மையங்கள் அமைக்கப்படும்.

 

ட்ரோன்கள் மூலம் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக 60 ட்ரோன்கள் வாங்கவும், பயிற்சி மற்றும் செயல் விளக்கத்திற்காக 10.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் 1,580 கிலோமீட்டர் நீளமுள்ள வாய்க்கால்களைச் தூர்வார 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். காவிரி டெல்டாவில் 4,964 கிலோமீட்டர் கால்வாய் மற்றும் வாய்க்கால்களைத் தூர்வார 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு தொழில் துவங்க தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Release of special election report

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சிதம்பரத்தில் உள்ள ஜெயங்கொண்டபட்டிணம் என்ற இடத்தில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டார். இதனை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். இந்த தேர்தல் அறிக்கையில், “வகுப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும். டாகர்.அம்பேத்கர் பிறந்தநாளை அறிவு திருநாளாக அங்கீகரிக்கப்பட வலியுறுத்தப்படும்.

இந்திய தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்படும். தமிழ்நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இலங்கை பிரச்சனையில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். கச்சத்தீவை இலங்கையில் இருந்து மீட்க நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும். தமிழக ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கக் கூடாது. மின்னணு வாக்கு எந்திரத்துக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வலியுறுத்தப்படும்.

பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு தனி வங்கி அமைக்கப்படும். உயர் சாதியினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு வழியாக தமிழை அறிவிக்க வேண்டும். பாசிச சக்திகளை அகற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும். இந்துத்துவ சக்திகளால் பாதிக்கபட்டவர்களை பாதுகாக்க தேவையான முயற்சிகளை விசிக மேற்கொள்ளும். காஷ்மீர் பிரச்சனை அடிப்படையில் இந்திய அரசின் வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப்படக் கூடாது.

ராமர் கோயில் கட்டுமானத்தில் நடந்த ஊழல் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படும். ராமர் கோயில் திறப்பு விழா நடந்துள்ள நிலையில் நீதிமன்ற ஆனைப்படி மசூதிக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை அவசியம் எடுக்கப்படும். மத்திய மற்றும் மாநில அளவில் பொது லோக்பால் அமைப்புகளை உருவாக்க வேண்டும். இதில் பொது மக்களும் பங்கேற்கும் வகையில் அதற்கான கண்காணிப்புக் குழுவையும் உருவாக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.