Skip to main content

டெல்லியிலிருந்து வந்த தேர்தல் நிதி! பெர்சனல் அக்கவுண்டில் பதுக்கிக்கொண்ட வேட்பாளர்கள்!

Published on 02/04/2019 | Edited on 02/04/2019


                 
                           தேர்தல் என்றாலே பண விளையாட்டுதான். மக்களுக்கும் தொண்டர்களுக்கும் ஏக குஷியை தருகிறது தேர்தல். ஆனால், தற்போதைய தேர்தல், காங்கிரஸ் தொண்டர்களிடம் அதிருப்தியை உருவாக்கி வருகிறது. 

 

          ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு அதிகபட்சம் 70 லட்சம் வரை செலவு செய்யலாம் என தலைமை தேர்தல் ஆணையம் நிர்ணயத்திருக்கும்  நிலையில், இதெல்லாம் டீ  செலவுக்கு மட்டும்தான் சரியாகும் என ஆவேசப்படுகிறார்கள் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள். அதனால், தேர்தல் ஆணையம் நிர்ணயத்த தொகையைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கோடிக்கணக்கில் செலவு செய்ய களமிறங்கியுள்ளனர். அதற்கேற்ப  பண மூட்டைகள் உடையும் சத்தம் எல்லா தொகுதிகளிலும் எதிரொலிப்பதால் பிரதான கட்சிகளின் தொண்டர்களிடம் குதூகலம் கொப்பளிக்கிறது. ஆனால், திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மட்டும் அந்த உற்சாகம் இல்லை.

 

d

             

ஏன், இப்படி? என கதர்ச்சட்டையினரிடம் நாம் காதுகொடுத்தபோது, ‘’ தமிழகத்தில் திமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது காங்கிரஸ் கட்சி. திருச்சியில் திருநாவுக்கரசு, தேனியில் ஈவிகேஎஸ் இளங்கோவன், சிவகங்கையில் ப.சி.யின் மகன் கார்த்திசிதம்பரம், குமரியில் வசந்த் அண்ட் கோ வசந்தகுமார் என வசதிபடைத்தவர்கள் களமிறங்கினாலும், தேர்தல் நிதி கேட்டு காங்கிரஸ் தலைமையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 

 


                இதனையடுத்து, 9 வேட்பாளர்களில் 5 பேருக்கு 2 சியும், 2 பேருக்கு 10 சியும் கொடுத்து உதவியிருக்கிறார் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி. சிவகங்கைக்கும் குமரிக்கும் மட்டும் தேர்தல் நிதி இல்லை. இதில் வசதிபடைத்த வேட்பாளர்கள் பல கோடிகளை தொகுதிக்குள் கொட்டி வருகின்றனர். மற்றவர்களோ டெல்லியிலிருந்து தேர்தல் நிதி கொடுக்கப்பட்டதையே மறைத்துவிட்டார்களாம். அதிலும் 10 சி வாங்கிய இருவரும் சுமார் 8 சியை பெர்சனல் அக்கவுண்டில் பதுக்கிக்கொண்டிருக்கிறார்கள். 

 

                இந்த நிலையில், திமுகவின் ஒத்துழைப்பு இருந்தால்தான் ஜெயிக்க முடியும் என நம்பும் காங்கிரஸ் வேட்பாளர்கள், உடன்பிறப்புகளை செமையாக கவனித்துள்ளனர். அதே கவனிப்பு கதர்சட்டை தொண்டர்களுக்கு இல்லை. முதல் கட்டமாக பூத் கமிட்டிக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்ததோடு, இனியும் தருவதற்கு பணம் இல்லை என முறுக்குகிறார்கள். இதனால் நொந்து போயிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களோ அதிருப்தியடைந்து வருகின்றனர். திருச்சி, தேனி, சிவகங்கை, குமரி தவிர மற்ற 5 தொகுதிகளில் கதர்சட்டையினரின் புலம்பல்கள் காதை துளைத்தபடி இருக்கிறது. இப்படியிருந்தால் காங்கிரஸ் வாக்குகளை அதிமுக கூட்டணி எளிதாக பர்ச்சேஸ் செய்துவிடும் ‘’ என கொந்தளிக்கின்றனர் கதர்சட்டையினர். 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.