Skip to main content

கனமழையால் நெற்பயிர்கள் நாசம்... வேதனையில் விவசாயிகள்!

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

மழையால் பயிர் சேதம்

 

கடலூரில் கனமழையால் நெற்பயிர்கள் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், பெண்ணாடம், வடலூர்  மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் குறுவை நெல் சாகுபடிக்கான அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் நலனுக்காக கடலூர் மாவட்டத்தில் 22 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள நிலையில், அறுவடை செய்த நெற்பயிர்களைச் சேமித்து வைக்க, இடம் இல்லாததால், சாலையோரம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவியல் குவியலாக விவசாயிகள் நெலமூட்டைகளைக் குவித்து வைத்துள்ளனர். 

 

நிலத்தடி நீர்மட்டம் சரிவு, மின்பற்றாக்குறை, இடுபொருள்கள் விலை உயர்வு, ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களில் பயிர் செய்து வந்த விவசாயிகள் கடந்த ஒரு வார காலமாக நெல் அறுவடை செய்து வரும் நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக  இரவு நேரங்களில் பொழியும் மழையினால் நெற்பயிர்கள், அறுவடை செய்த நெல் மணிகள் நீரில் நனைந்துள்ளன. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக விவசாயிகள் தங்களின் நெல் மூட்டைகளை  வைத்திருந்த நிலையில்,  திடீர் மழையால் அனைத்தும் நனைந்து நாசமாகின. இதனால்  விவசாயிகள் செய்வதறியாமல் வேதனையில் உள்ளனர். மேலும் அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ள நெற்பயிர்களும் மழையினால் கதிர்கள் சாய்ந்தும், நெல் மணிகள் நிலத்திலேயே உதிர்ந்து முளைக்கட்டிய நிலையில் உள்ளதால் விவசாயிகளின் வேதனை அதிகரித்துள்ளது. 

 

அதுபோல் அறுவடை செய்தபின் கிடைக்கக்கூடிய வைக்கோலை கால்நடை தீவனத்திற்காக விற்பனை செய்வது மூலம் அறுவடை செய்வதற்கான கூலியைச் சமாளித்து வந்த விவசாயிகள், தற்போது மழையினால் வைக்கோல்களும் நனைந்ததில் வேதனையின் உச்சத்திற்கே சென்றுள்ளனர். 

 

தமிழக அரசு ஈரப்பதத்தைக் காரணம் காட்டாமல் அனைத்து நெல்களையும் கொள்முதல் செய்ய வேண்டும், அரசு அறிவித்த நெற்பயிர்க்கான ஆதார விலையை விவசாயிகளுக்குக் கிடைக்க ஆவண செய்ய வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு உலர் களம் அமைத்துத் தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sudden landslide in Arunachal Pradesh

அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி திபெங் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள திபெங் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 33 அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ரோயிங் - அனினி இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவடடங்களில் இருந்து திபெங் மாவட்டம் தனியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்படும் வரை அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைய 3 நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இந்த வழித்தடத்தில் பயணங்களை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.