
தமிழகத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது நோய்த் தொற்றின் வேகம் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து, செவ்வாய்க்கிழமை (ஜன.19) முதல், முதற்கட்டமாக 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன்படி நேற்று தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன.
பள்ளிகளில் மாணவர்களுக்கு கிருமிநாசினி, வைட்டமின், ஜிங்க் மாத்திரைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும் பள்ளிவரும் மாணவர்களுக்குக் கரோனா குறித்தான விழிப்புணர்வு, தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பது குறித்தான அறிவுரைகளை ஆசிரியர்கள் வழங்கினர்.
இந்நிலையில் பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணன், “மாணவர்கள் ஆசிரியர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் கரோனா பரிசோதனை செய்யப்படும். பரிசோதனையின் முடிவில் தொற்று இருப்பது தெரியவந்தால் அதற்கேற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.