
சட்டப்பேரவையில் இன்று, கடந்த 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மீது தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலுரையாற்றினார். கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான வரைவு அறிக்கை தயாராகிவிட்டது எனவும், மதுரையில் மெட்ரோ ரயில் சேவைக்கு சாத்தியக்கூறு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து மே மாதத்திற்குள் தெரிவிக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்துப் பேச வாய்ப்பளிக்குமாறு அதிமுகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில், அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். மேலும் தொடர்ந்து சட்டப்பேரவையில் உரையாற்றிய பழனிவேல் தியாகராஜன், ''காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டு திட்டம் 1,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.இந்த திட்டத்தின் கீழ் கல்லூரி கட்டிடங்கள் கட்டப்படும்'' என்றார்.