Skip to main content

மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

Chief Secretary action order to District Collectors

 

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளவும், ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தினைக் கண்காணிக்கவும் தலைமைச் செயலாளர்  சிவ் தாஸ் மீனா  உத்தரவிட்டுள்ளார்.

 

இது குறித்து தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பள்ளிக்கூடங்களிலுள்ள ஆரம்ப வகுப்புகளில் 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை முறையாகச் செயல்படுத்துவது தொடர்பான மிகவும் முக்கியமான விடயத்தை  கவனத்திற்கு கொண்டுவரவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஒவ்வொரு குழந்தையும் தரமான கல்வியைப் பெறுவதையும், அவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளின் பலன்களையும் உறுதிசெய்வது மாநிலத்தின் பொறுப்புள்ள அலுவலர்களாக நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

 

அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட 'எண்ணும் எழுத்தும்' திட்டமானது ஆரம்பக் கல்விக்கான ஒரு புதுமையான முன்னோடி அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது. இது, குழந்தைகள் தங்களின் கற்றல் செயல்பாட்டில் ஈடுபாட்டோடு பங்கேற்கும் விதமாக செயலூக்கம் மிக்க இடங்களாக வகுப்பறைகளை மாற்றும் நோக்கத்தைக் கொண்டது. வெறுமனே கேட்டுக்கொண்டு மட்டுமே இருக்கும் மரபான வழக்கமாக இது இருக்காது. அனுபவரீதியான கற்றலையும், சுய கண்டறிதல்களையும், சக மாணவர்களுடன் ஒருங்கிணைந்து கற்பதையும் இந்தத் திட்டம் ஊக்குவிக்கிறது. இது அச்சுறுத்தலற்ற மதிப்பீட்டு முறையை ஜனநாயகரீதியான, எல்லோரையும் உள்ளடக்கிய கல்வியை ஊக்குவிக்கிறது. அறிமுகப்படுத்துகிறது. இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் பொருட்டு, மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது கற்றல் நிலை, கற்றல் விளைவுகள், கற்றல் செயல்பாடுகள், மகிழ்ச்சி மற்றும் மன அழுத்த நிலைகள் கற்றல் சிறப்புப் பகுதிகள் அச்சுறுத்தலற்ற அணுகுமுறை, உட்கட்டமைப்பும் வசதிகளும் மற்றும்  பள்ளி சுகாதாரத் திட்டம் போன்ற அம்சங்களைக் கவனிக்க வேண்டும்.

 

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதை மேற்பார்வையிடுவதில் கூட்டு முயற்சியானது மாணவர்களுக்கு ஈடுபாட்டை உருவாக்குவதிலும் பயனுள்ள கற்றல் அனுபவத்தை வழங்குவதிலும் இன்றியமையாததாகும். ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்வதன் மூலம் நம் மாணவர்களின் நலனை மேம்படுத்த முடியும்; இந்த முன்முயற்சியை மேலும் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும். இதற்கான உங்களின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. மேலும், நீங்கள் இந்த ஆய்வுகளை விடாமுயற்சியுடனும் நம் மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டும் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த ஆய்வுகளுக்காக நீங்கள் பள்ளிப் பார்வை செயலியைப் பயன்படுத்தலாம். பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மேற்பார்வை அலுவலர்களும் முதன்மைக் கல்வி அலுவலர் முதல் வட்டாரக் கல்வி அலுவலர் வரை, பள்ளிகளைத் தவறாமல் ஆய்வுசெய்வதையும், வகுப்பறைகளைக் கண்காணிப்பதையும் பள்ளிப் பார்வை செயலி மூலம் நீங்கள் உறுதிசெய்யலாம்” என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது” - இ.பி.எஸ்.!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
“Should not charge for summer training camp” - EPS

தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் நடத்தும் கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழக மாணவ, மாணவிகள் எந்த விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவ்விளையாட்டுக்களில், மாணாக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மாவட்டம் தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும். இவ்விளையாட்டுப் பயிற்சி முகாமில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். அதன்படி இந்தாண்டு 29.4.2024 முதல் 13.5.2024 வரை கால்பந்து, வாலிபால், கபாடி, கூடைபந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும், அதற்காக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக் கட்டணமாக சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து வருபவர்கள். அவர்களிடம் பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்க ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பிற்கு, விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசில், மாணவர்களின் விளையாட்டுப் பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், கோடை கால பயிற்சி முகாமிற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்காமல், 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விளையாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்று தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் தங்களது திறமைகளை நிரூபித்து வந்தனர்.

தமிழகத்தில் விளையாட்டை ஊக்கப்படுத்துவோம், தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கு பெறுவதை ஊக்குவிப்போம் என்றும், அதற்காக மாவட்டந்தோறும் விளையாட்டு மைதானங்கள் (ஸ்டேடியம்) அமைக்கப்படும் என்றும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை பிரதம மந்திரியை வைத்து ஆரம்பித்து வைத்தோம் என்றும், உலக செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்திவிட்டோம் என்றும் கூறும் திமுக அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, எந்த ஆண்டும் இல்லாத புதுமையாக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் மாணவர்களிடமிருந்து பயிற்சிக் கட்டணமாக 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டியில் ஆர்வமுள்ள, துடிப்புமிக்க மாணவர்களை முடக்கிப் போடும் இந்த அரசின் அதிமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். விளையாட்டை ஊக்கப்படுத்துவோம் என்று ஒருபக்கம் கூறிக்கொண்டே, மறுபக்கம் அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், வழக்கம்போல் கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.