காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கர்நாடகாவில் கபினி, கே.எஸ்.ஆர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கர்நாடகா அணைகளிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரித்துவருகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேபோல், காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள், வெள்ளம் காரணமாக பத்து மாவட்டங்களில் உள்ள 49 முகாம்களில் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது ஈரோடு மாவட்டம், பவாணி அடுத்த கந்தன்பட்டறை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக பேசி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், அவர்களுக்கு உணவுகள் முறையாக வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, திருச்சி, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் பேசிய முதலமைச்சர், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.