Skip to main content

இறந்துகிடந்த மயில்கள்... அலட்சிய போக்கில் வனத்துறை...!

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

வனத்துறை என்கிற துறை செயல்படுகிறதா, வனத்துறை அதிகாரிகள் வேலை பார்க்கிறார்களா என்ற சந்தேகம் இறந்து கிடந்த மயிலை கண்ட பலருக்கு எழுந்தது.

 

  Thanjavur Peacocks issue - Indictment on Forest Service

 



கொள்ளிடக் கரையோரம் உள்ள படுகைகள் முழுவதும் அடர்ந்த காடுகளாகவே இருக்கிறது, பல இடங்கள் விவசாயிகளின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இடை, இடையே வனத்துறைக்கு சொந்தமான மரங்களும் இருக்கின்றன. அங்கு மயில் உள்ளிட்ட பறவைகள் வளர்ந்துவருகின்றன. காடுகள் முழுவதும் வறண்டு, பசுமையின்றி காணப்படுவதால் இறைதேடி மயில்கள் விளைநிலங்களை தேடிவந்துவிடுகின்றன. அப்படி வந்த 21 மயில்கள் பரிதாபமாக இருந்து கிடந்தது, அந்த தகவலைக்கூறுவதற்கு கூட வனத்துறை அதிகாரிகள் இல்லை என்பதுதான் அங்கு கூடியிருந்த மக்களின் வேதனை.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் மேல மதுரையை சேர்ந்த தேமுதிக ஒன்றிய செயலாளர் முருகனின் தோட்டத்தில் 21 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் பந்தநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு சென்று விசாரணை செய்த காவல்துறையினர், வனம்சம்மந்தப்பட்ட அதிகாரிகள் யார் என்பது தெரியாமல் கண்டுபிடிக்கவே படாதபாடு பட்டு விட்டனர். பிறகு அதிகாரிகளுக்கு தகவல் கூறினர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், "சம்பா தாளடி அறுவடை முடிந்த பிறகு உளுந்து பயிரைத் தெளித்துள்ளனர். அதிக மகசூலுக்காகவும், பூச்சிகளை கட்டுப்படுத்தவும் ரசாயனம் கலந்த உரத்தைத் தெளித்திருந்த வயலில் மயில் மேய்ந்திருக்கலாம், இல்லை என்றால் இறைச்சிக்காக மயில்களை வேட்டையாடி இருக்கலாம்," என்றனர்.

 



அங்கு வராமலேயே பதில் கூறிய வனத்துறை அலுவலர் முருகானந்தமோ," அங்க மயில் தோகைகள் மட்டுமே கிடைக்கிறது, மயில்கள் இறந்திருக்க வாய்ப்பில்லை இது தவறானது," என்கிறார்.

இது குறித்து பந்தநல்லூர் பகுதியை சேர்ந்த முன்னாள் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"ஒருகாலத்தில் வனத்துறைக்கு சொந்தமான மரத்தில் விறகு ஒடித்து, அதிகாரிகளிடம் சிக்கி, வழக்கில் இருந்து மீண்டுவர சொந்த சொத்தை வித்த சம்பவங்கள் நிறைய உண்டு. ஆனால் இன்றைய நிலைமை தலைகீழாக இருக்கிறது. பாரஸ்ட் என்கிற துறை இருக்கிறதா, அதற்கான அதிகாரிகள் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை, பாரஸ்ட்டுக்கு சொந்தமான மரங்கள் முழுவதும் கேட்பாரற்று கிடக்கிறது. காட்டில் வளரக்கூடிய விலங்குகளும், பறவைகளும் வேட்டையாடப்படுகின்றன. மயில் போன்ற பறவைகளின் கறி அதிக விலைக்கு போவதாலும் முக்கிய பிரமுகர்களுக்காகவும் வேட்டையாடப்படுவது அதிகரித்துவிட்டது. நெய்குப்பை பகுதியில் மயில்கள் தினசரி வேட்டையாடப்படுகிறது . ஆனால் யாரும் அதை கண்டுகொள்வதில்லை. வனத்துறை அதிகாரிகள் கரையோரத்தில் இருக்கின்ற மரங்களை கவனிப்பதை விட்டுவிட்டு, இருக்கும் மரம் அறுக்கும் சா மில்லில் கையூட்டுப் பெற்றுக்கொண்டு அங்கே கொடுக்கப்படும் விருந்துக்கு அடிபணிந்து கிடக்கின்றனர்". என்கிறார் ஆதங்கமாக.

வனத்துறை அமைச்சருக்கு வனத்துறை அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியவில்லையா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

சிக்காத சிறுத்தை! பிடிக்க முடியாமல் தடுமாறும் வனத்துறை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 forest department is struggling to catch the elusive leopard

கடந்த 2ஆம் தேதி மயிலாடுதுறை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த வனத்துறையினர் மற்றும் அதிகாரிகளை வரவழைத்து, தனிக்குழு அமைத்து அந்தச் சிறுத்தையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதன்படி, சிறுத்தையின் காலடித்தடம் அது சிறுநீர் கழித்ததற்கான அடையாளம், அதன் கழிவு ஆகியவற்றை அடையாளம் கண்டு, சிறுத்தை மயிலாடுதுறை பகுதியில் நடமாடுவதை உறுதி செய்தனர். அதைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை செய்து வந்த நிலையில், நான்கு தினங்களுக்கு முன் அரியலூர் மாவட்டம் செந்துறை நகரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்தனர். இது குறித்து அரியலூர் வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதி இளைஞர்களுடன் சிறுத்தையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர்.

 forest department is struggling to catch the elusive leopard

ஒரு லேத் பட்டறையில் பதுங்கி இருந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியதைப் பலரும் பார்த்தனர். இதையடுத்து சிறப்பு குழுவினர் பெரிய கூண்டை கொண்டு வந்து செந்துரை அருகே உள்ள ஓடை பகுதியில் கூண்டுக்குள் ஆட்டை அடைத்து வைத்தனர். ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு ஆட்டை உணவாக சாப்பிட்டு சிறுத்தை அந்த கூண்டை தேடி வரும் அப்போது அதில் மாட்டிக்கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் சிறுத்தை அந்தக் கூண்டுக்குள் வந்து சிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து செந்துறையைச் சுற்றிலும் உள்ள முந்தரிக்காட்டு பகுதிகளுக்குள் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுத்தை அரியலூர் மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் அல்லது அருகில் உள்ள கடலூர் மாவட்ட பகுதிகளுக்குள் சென்று இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். தற்போது நிலவரப்படி தினசரி ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் வரை சிறுத்தை இரவு நேரங்களில் இடம்பெயர்ந்து சென்றுள்ளது.

 forest department is struggling to catch the elusive leopard

இதனடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட எல்லைய ஒட்டிய கிராமங்களில் வனத்துறையினர் தங்களது கண்காணிப்பைத் தீவிர படுத்தியுள்ளனர். இதனைப்போன்று கடந்த 2013 ஆம் ஆண்டு பெரம்பலூர் நகரை ஒட்டி உள்ள பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பெரம்பலூர் அருகில் உள்ள துறைமங்கலம், கவுல்பாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தையைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு அப்பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுக்குள் ஆட்டை விட்டு காட்டுப்பகுதியில் வைத்தனர். அப்போது அந்தச் சிறுத்தை ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு அதை கடித்து தின்பதற்காக கூண்டுக்குள் சென்று சிக்கியது. இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அந்தச் சிறுத்தையை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இவ்வாறு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரம்பலூர் ,அரியலூர்,மாவட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.