Skip to main content

கோயம்பேடு மார்க்கெட் கரோனா தொற்று மையமாக இருப்பதாக வழக்கு!- தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 18/04/2020 | Edited on 18/04/2020


சென்னை கோயம்பேடு மார்க்கெட் கரோனா வைரஸ் தொற்று ஏற்படும் மையமாகத் திகழ்வதாகத் தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில், கெருகம்பாக்கம் சுற்றுவட்டார வியாபாரிகள் நலச்சங்கத்தின் துணைத் தலைவர் ஜெயசீலன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் சட்டப்படி முறையாகப் பதிவு செய்யப்பட்ட எங்கள் சங்கத்தில், மளிகைக் கடை, பெட்டிக்கடை, டீ கடை உள்ளிட்ட கடைகளை நடத்தி வருபவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

 

 

chennai koyambedu market high court tn government


அதேநேரம், மளிகை, காய்கறி, பழம் போன்ற அத்தியவாசியப் பொருட்களை விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், குறிப்பிட்ட தூரத்துக்கு இடைவெளி விட்டு பொதுமக்கள் பொருட்கள் வாங்கிச் செல்ல வேண்டும். இந்த நடைமுறையை வாடிக்கையாளர்கள் கடைப்பிடிக்கவில்லை என்றால், கடைகளின் உரிமையாளர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்துகின்றனர். வருவாய்த் துறையினரும் கடைக்கு சீல் வைக்கின்றனர். எனவே, சிறுகடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை் ஒழுங்குபடுத்தும் பணியில் என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்களையும், தன்னார்வலர்களையும் பயன்படுத்த உத்தரவிட வேண்டும்.

அத்தியவாசியப் பொருட்களை மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்ய சிறு வியாபாரிகள் செல்லும்போது, காவல்துறையினரால் தொந்தரவு ஏற்படுகிறது. அதனால், சிறு வியாபாரிகளுக்கு தனியாக அடையாள அட்டை வழங்க உத்தரவிட வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்குவதுடன், அவர்களது குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும். 

 

http://onelink.to/nknapp

 

chennai koyambedu market high court tn government


மேலும், சென்னை கோயம்மேடு மார்க்கெட், கரோனா வைரஸ் தொற்று பரவும் மையமாகத் திகழ்கிறது. காய்கறி, பழங்கள், பூக்கள் வாங்க வியாபாரிகள் மட்டுமல்லாமல் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் வைரஸ் தடுப்பு நடைமுறைகள் எதையும் முறையாகப் பின்பற்றுவது இல்லை. 

முகக்கவசம், கையுறை பயன்படுத்துவதும் இல்லை. நெருக்கமாக நின்று பொருட்களைப் பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். எனவே, கோயம்பேடு மார்க்கெட்டில் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். ஊரடங்கு உத்தரவினால் வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் பெற்ற தொழில் கடன்களுக்கு 3 மாத வட்டியைத் தள்ளுபடி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 

இந்த மனு,  நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் ஆர்.பொங்கியப்பன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்குப் பதில் மனுத் தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

சார்ந்த செய்திகள்