Skip to main content

லட்சக்கணக்கான மாணவர்கள் நலனில் எப்படி ரிஸ்க் எடுப்பீர்கள்?- தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

chennai high court 10th public exam tn government


கரோனா அச்சுறுத்தல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அமர்வு முன் இன்று (08/06/2020) விசாரணைக்கு வந்துள்ளது. விசாரணையின்போது முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள் இவைதான்-
 


வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ: மே 20- ஆம் தேதி அறிவித்தபோது ஜூன் 15 முதல் தேர்வை நடத்துவது குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. கரோனா பரவலைக் கருத்தில் கொள்ள வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது. ஆசிரியர்கள் காத்திருப்புக் கூடங்களில் தனி மனித இடைவெளி சாத்தியமில்லை. மார்ச்சில் நடத்த திட்டமிட்டனர், பின்னர் ஜூன் 1-இல் நடத்த திட்டமிட்டனர்.

நீதிபதிகள்: ஏற்கனவே தேர்வு 2 மாதங்கள் தள்ளிப்போகியுள்ளன. அனைத்து தரப்பினரும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ: தேர்வுக்கு முன்பாக மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டியது அவசியம். பள்ளிகளைத் திறப்பது குறித்து ஜூலையில் முடிவெடுக்க, மத்திய அரசு மே மாதம் 13- ஆம் தேதி அறிவுறுத்தியுள்ளது. 30% மாணவர்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ளனர். எனவே ஜூலையில் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்.

அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன்: இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராக இருக்கிறார். ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகள் ஜூன் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.
 

 


நீதீபதிகள்: லட்சக்கணக்கன மாணவர்களின் நலனில் எப்படி ரிஸ்க் எடுப்பீர்கள்? எப்படி வருவார்கள்? எப்படிப் போவார்கள்? ஒரு மாதம் தள்ளிவைக்காமல் தேர்வு நடத்த ஏன் அவசரம் காட்டப்படுகிறது? மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

அரசு வக்கீல்: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாணவர்கள் வெளியில் வர வேண்டியதில்லை. அறிக்கை தாக்கல் செய்கிறோம்.  

நீதிபதிகள்: தொடர்ந்து அறிக்கை மட்டும் தாக்கல் செய்வதால் என்ன பலன்? மே 3- வது வாரம் அறிவித்தீர்கள் ஆனால் எண்ணிக்கை உயர்வதைக் கவனிக்கவில்லையா? 35 ஆயிரம் பாதிப்பில் 26 ஆயிரம் பேர் வட சென்னையில் மட்டுமே உள்ளனர். ஜூன் 30 வரை ஊரடங்கு உள்ள நிலையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில், 9 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், காவல்துறையினர், வருவாய்த் துறையினர் என அனைவரும் இக்காட்டான நிலைக்கு உள்ளாக வேண்டுமா? ஊரடங்கு காலத்திலேயே 10-ஆம் வகுப்புத் தேர்வை நடத்த என்ன அவசியம் உள்ளது என நினைக்கின்றீர்கள்? பள்ளிகளைத் திறப்பதிலேயே ஜூலையில்தான் முடிவெடுக்க வேண்டுமென மத்திய அரசு கைட்லைன்ஸ் வெளியிட்டுள்ள நிலையில், அதை நீங்களே மீறுவீர்களா? 9 லட்சம் இளம் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான விசயம் இது.
 

 

http://onelink.to/nknapp


பள்ளிக் கல்வி சிறப்பு வழக்கறிஞர் முனுசாமி: சில மாநிலங்கள் தேர்வை முன்கூட்டி நடத்திவிட்டன. 11, 12- ஆவது வகுப்புகளுக்குத் தலா ஒரு தேர்வு மட்டுமே உள்ளது.

விசாரணை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

“ஓ.பி.எஸ். இரட்டை இலையைப் பயன்படுத்தத் தடை தொடரும்” - உயர்நீதிமன்றம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ban on using OPS aiadmk symbol will continue says Madras High Court

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு பல கட்ட விசாரணைக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கடந்த 18 ஆம் தேதி, “அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம், கொடி ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது” என அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதா இல்லையா என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால்,  அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை தனக்கு கட்சியின் இரட்டை இலை, சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, “அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது; ஓ.பி.எஸ். இரட்டை இலை, கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மேல்மூறையீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தை அணுகத் தடையில்லை என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.