Skip to main content

பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன் தனிமை… மாமூல் வேட்டை! எஸ்.ஐ. உள்பட 4 போலீசார் பணியிடை நீக்கம்!!

Published on 09/11/2021 | Edited on 10/11/2021

 

salem police commissioner order police suspended

 

சேலத்தில், பாலியல் தொழில் செய்யும் பெண்களோடு தனிமையில் இருந்ததுடன், பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்ததாக காவல்துறை எஸ்.ஐ. உள்பட நான்கு போலீசாரை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.  

 

சேலம் குமாரசாமிப்பட்டியைச் சேர்ந்தவர் நடேசன், அதிமுக பிரமுகர். இவருடைய அடுக்குமாடிக் குடியிருப்பில் தேஜ் மண்டல் (வயது 27) என்ற இளம்பெண் வசித்துவந்தார். இவர், தனது காதலனான சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த பிரதாப் என்பவருடன் சேர்ந்து சேலம் பள்ளப்பட்டி, சங்கர் நகர் ஆகிய இடங்களில் அழகுநிலையம் மற்றும் மசாஜ் மையம் ஆகியவற்றை நடத்திவந்தார். 

 

கடந்த அக்டோபர் 15ஆம் தேதி, பூட்டப்பட்ட வீட்டுக்குள் ஒரு சூட்கேஸ் பெட்டியில் கை, கால்கள் மடக்கிக் கட்டப்பட்ட நிலையில் தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டுக் கிடப்பது தெரியவந்தது. இவர், தன்னுடைய மசாஜ் மையத்தில் வேலை செய்துவந்த ஆண் ஒருவரையும், பெண்கள் மூவரையும் தான் தங்கியிருந்த அறைக்கு பக்கத்திலேயே தனியாக ஒரு அறை எடுத்து தங்க வைத்திருந்தார். 

 

அவரிடம் வேலை செய்துவந்த லப்லு, நிஷி ஆகிய இருவரும் தேஜ் மண்டல் கொலைக்குப் பிறகு தலைமறைவாகிவிட்டனர். காதலர்களான அவர்கள் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சொந்த நாட்டிற்குத் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களைத் தேடி தனிப்படை காவல்துறையினர் வங்கதேசம் விரைந்துள்ளனர். 

 

இது ஒருபுறம் இருக்க, தனிப்படையினர் நடத்திய விசாரணையில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. தேஜ் மண்டல் தனது மசாஜ் மையத்தில் அழகுக்கலை மற்றும் மசாஜ் சேவை அளிக்கும் போர்வையில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது  தெரியவந்தது. 

 

கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பாலியல் தொழிலை ஒழிக்கும் வகையில் சேலம் மாநகரில் உள்ள அனைத்து மசாஜ் மையங்களிலும் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 

 

அப்போது பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தியதாகவும், பாலியல் தொழில் செய்துவந்ததாகவும் பல புரோக்கர்கள், பெண்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், தேஜ்மண்டலும் அதே குற்றத்தில் ஈடுபட்டு வந்தாலும் கூட அவர் அப்போது கைதாகாமல் தப்பிச் சென்றுள்ளார். 

 

இதன் பின்னணியில் சேலம் மாநகர போலீசார் சிலர் தேஜ்மண்டலிடம் பணம் வாங்கிக்கொண்டு அவரை கைது செய்யாமல் தப்பிக்க விட்டிருப்பதும், அவ்வப்போது அவருடைய மசாஜ் மையத்தில் உள்ள பெண்களுடன் தனிமையில் இருந்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

 

இத்தகவல்கள், சேலம் மாநகர காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி நடத்திய விசாரணையில், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் அப்போது பணியாற்றிய எஸ்.ஐ. ஆனந்தகுமார், சிறப்பு எஸ்.ஐ. சேகர், காவலர் கலைச்செல்வன், தலைமைக் காவலர் மணிகண்டன் ஆகியோர் மசாஜ் செய்யும் பெண்களுடன் தனிமையில் இருந்ததும், பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. 

 

இதுகுறித்த விரிவான விசாரணை அறிக்கையை துணை ஆணையர் மாடசாமி, மாநகர காவல்துறை ஆணையரிடம் சமர்ப்பித்தார். இதையடுத்து, சமூக விரோத செயல்களுக்குத் துணை போனதாக எஸ்.ஐ. ஆனந்தகுமார் உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட நான்கு பேரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார். 

 

இச்சம்பவம், குற்றத்திற்கு உடந்தையாக இருக்கும் காவல்துறையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்றாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.