ஊரடங்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இமானுவேல் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக, 21 நாட்கள் என்று கூறி, கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கை படிப்படியாக நீட்டித்து, தற்போது வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் வருவாய் இழந்து வறுமையில் உள்ளனர். குறிப்பாக, குறைவான வருவாய் பெறுவோர், கடுமையான சிரமத்தில் உள்ளனர். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க சீனா, இத்தாலி போன்ற நாடுகள் முழு ஊரடங்கை அறிவித்தது. ஆனால், தென்கொரியா, ஸ்வீடன் போன்ற நாடுகள் முழு ஊரடங்கை அறிவிக்காமல், வைரஸ் தொற்று பரவலை தடுத்தது. எனவே, உலகில் இந்த வைரஸுக்கு எதிராக இரு விதமான நடவடிக்கைகளை நாடுகள் எடுக்கின்றன. மேலும், கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும்வரை அது நம்முடன்தான் இருக்கும். ஒருவருக்கு ஒருவர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்; முகக்கவசம் அணியவேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. இதைக் கடை பிடித்தாலே வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்கலாம். எனவே, ஊரடங்கை நீட்டித்து கடந்த 17-ம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அளவில் ஒரு திட்டம் இருக்க வேண்டும், அதுபோல், மாவட்ட அளவிலும் ஒரு திட்டம் இருக்க வேண்டும், அதற்காக, தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், இதுபோல் எந்த ஒரு திட்டமும் இல்லை என்று வாதிட்டார். அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இதுபோல் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. மனுதாரர் அரசியல் கட்சியை சார்ந்தவர். எனவே, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.