Skip to main content

தங்கையை கிண்டல் செய்த பள்ளி மாணவன்; காத்திருந்து பழி வாங்கிய அண்ணன்!

Published on 18/02/2024 | Edited on 19/02/2024
The brother who waited and took revenge for A schoolboy who teased his younger sister

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ்(17). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், பிரணவ் ஒண்டிப்புதூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரணவை சரமாரியாக வெட்டினார்.

இதில் படுகாயமடைந்த பிரணவ், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். இருந்த போதிலும், ஆத்திரம் அடங்காத அந்த இளைஞர், பிரணவ்வை ஓட ஓட விரட்டி வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிரணவ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்டு பதற்றமடைந்த அங்கிருந்தவர்கள், பிரணவ்வை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கொலை செய்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து கொலை செய்த இளைஞரை தீவிரமாகத் தேடி வந்தனர். இதற்கிடையே, பிரணவை கொலை செய்ததாக அந்த நபர் சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அதில், சரணடைந்த நபர் 18 வயதுக்கு உட்பட்டவர் என்றும், அவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், பிரணவ் கடந்த 2022 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு படித்துபோது, தனது சக மாணவர்களுடன் கைதான நபரின் தங்கையை கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து, அவர்களிடம் கைதான நபர் கேட்டபோது, பிரணவ் உள்ளிட்ட மாணவர்கள் அவரைத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து, தன்னை தாக்கிய மாணவர்களில் ஒரு மாணவரை, கடந்தாண்டு கைதான நபர் கத்தியால் குத்தியுள்ளார். இது தொடர்பான வழக்கில்,கல்லூரி மாணவரான இவர், கைதாகி சிறார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து சிறையிலிருந்து வெளியே வந்தவர், பழிக்குப் பழி வாங்க துடித்துள்ளார். இந்நிலையில், தனியாக வந்த பிரணவை கண்ட அவர், அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்