Skip to main content

மனம் திருந்திய குற்றவாளிகளுக்கு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

Published on 14/04/2022 | Edited on 14/04/2022

 

Awareness counseling meeting offenders

 

அரியலூர் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்கள், குற்றப் பட்டியலில் பெயர் உள்ளவர்களில்  மனம் திருந்தி சமூகத்தில் தாங்களும் நல்லவர்களாக வாழ வேண்டும், மதிக்கப்பட வேண்டும், தலை நிமிர்ந்து நடக்க வேண்டும், தங்களது குடும்பத்தினர் பிள்ளைகள் படித்து முன்னேறி வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களை ஒருங்கிணைத்து காவல்துறையினர் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர்.

 

அந்த வகையில்  திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டுதல் மையம் இணைந்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான், துணை கண்காணிப்பாளர் ராஜன் டிஜிபி, காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் 21 குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை ஒரே இடத்திற்கு வரவழைத்தனர். அதன்பின் அவர்களுக்கு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கினார்கள். இதில் கலந்து கொண்ட பலருக்கும் போட்டோகிராபர், வெல்டர் போன்ற தொழில்கள் தொடங்குவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது. 

 

மேலும் அவர்களின் பிள்ளைகள் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், காவல் துறை உள்ளிட்ட பல அரசு தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்கள். இவர்கள் நேர்மையான முறையில் தொழில் செய்து தங்கள் குடும்பத்தினரைக் காப்பாற்றுவதற்காக சுய உதவி குழுக்கள் மூலம் கடன் உதவி பெற்று தொழில் செய்யவும் முன்வந்துள்ளனர். மனம் திருந்தி தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்றுவதற்கு முன்வந்துள்ள இவர்களின் வாழ்க்கைத் தரம் உயர அதிகாரிகள் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு சமூக நல ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்