ஈரோட்டில் ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு ஜவுளிக்கடைகள் அதிகம் உள்ள பகுதியான பிருந்தா வீதியில் ராஜஸ்தானை சேர்ந்த தூதாராம் என்பவருக்கு சொந்தமான கணபதி சில்க்ஸ் & ரெடிமேட்ஸ் ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை செய்து வருகின்றனர். கடையை ரூபா ராம் என்ற கடை ஊழியர் கவனித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு சென்று உள்ளார். இன்று காலையில் கடையை திறக்க வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பகுதியில் பூட்டுகள் உடைக்கப்பட்டும் மற்றொரு பூட்டு உடைக்க முடியாமல் இரும்பு ராடுகளும் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர் ரூபா ராம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கடையின் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும் தடையங்களை கைப்பற்றியும் விசாரணை நடத்தினர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்ற மர்ம நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடையின் ஷட்டர் இரு புறங்களிலும் இருந்த பூட்டை உடைத்த மர்ம நபர்கள் ஷட்டர் பகுதியின் நடுவே உள்ள பூட்டை உடைக்க முடியாமல் இரும்பு ராடுகளை கொண்டு உடைக்க முயற்சி செய்ததும் தெரியவந்தது. ஜவுளி கடைகள் அதிகம் உள்ள பகுதியில் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.