Skip to main content

வேலை தருவதாக போஸ்டர் அடித்து ஏமாற்றும் கும்பல்! காவல்துறையில் சிக்கவைத்த இளம் பெண்! 

Published on 07/02/2022 | Edited on 07/02/2022

 

Two youngsters arrested near kallakurichi in fraud case

 

படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் அப்பாவி இளைஞர்கள், இளம் பெண்களிடம் தொடர்ந்து மோசடி செய்து வந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

கள்ளக்குறிச்சி அருகிலுள்ள பெரிய மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாசிவேல் என்பவரது மகன் ராஜேஷ்(31), சேலம் மாவட்டம், அம்மாபேட்டை கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சீரங்கன் என்பவரது மகன் திலீப் குமார்(22). நண்பர்களான இவர்கள் இருவரும் பல்வேறு நகரங்களில் அவ்வப்போது சென்று அங்குள்ள விடுதிகளில் அறை எடுத்து தங்கிக் கொள்வார்கள். அங்கிருந்தபடி நகரப் பகுதிகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள். அந்த போஸ்டரில் தங்கள் செல்போன் எண்களையும் குறிப்பிடுவார்கள். அந்த எண்களை பார்க்கும் வேலை கிடைக்காத படித்த பட்டதாரி இளைஞர்களும், இளம்பெண்களும் வேலை கேட்டு இவர்களிடம் வருவார்கள். அவர்களிடம், “உங்களுக்கு வேலை தரவேண்டுமானால் எங்கள் கம்பெனியில் டெபாசிட் தொகை கட்ட வேண்டும்” என்று கூறுவார்கள். அதன்படி சில ஆயிரங்களை அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு விடுதியை காலி செய்துவிட்டு மாயமாக மறைந்து விடுவார்கள். அதன்பிறகு அவர்களது செல்போன்களும் இயங்காது. இப்படிப் இவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் துணிச்சலாக போலீசில் புகார் கொடுத்து இருவரையும் கைது செய்ய வைத்துள்ளார். 

 

கள்ளக்குறிச்சி நகரில் உள்ள நெப்போலியன் தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் 20 வயது மகள் சௌந்தர்யா, கல்லூரியில் படித்து வரும் மாணவியான அவர், கல்லூரியில் படித்துக் கொண்டே ஏதாவது வேலை செய்து அதில் கிடைக்கும் வருவாய் மூலம் தனது படிப்பையும் குடும்பத்திற்கும் உதவி செய்ய வேண்டும் என்று கருதினார். 

 

கல்லூரிக்குச் சென்று திரும்பும் வழியில் கடந்த அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி கச்சேரி சாலையில் வேலைக்கு ஆட்கள் தேவை என ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை படித்துப் பார்த்தார். அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். செல்போன் எண்ணில் பதில் கூறிய ஆண் ஒருவர், தாங்கள் தங்கியுள்ள விடுதிக்கு நேர்காணலுக்கு வருமாறு கூறியுள்ளனர். அங்கு சென்றபோது ராஜேஷ், திலீப் குமார் இருவரும் அவர்களை "ட்ரூ ஃபியூச்சர் இந்தியா" கம்பெனியின் மேலாளர் என்றும், மற்றொருவர் துணை மேலாளர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டனர். 

 

தொடர்ந்து தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டுமானால் 5000 ரூபாய் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். அப்படி செலுத்தும் பணத்திற்கு சில நாட்கள் கழித்து வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி கொள்ளலாம். மேலும் எங்கள் கம்பெனிக்கு நிறைய ஆட்களை சேர்த்து விட்டால் அதில் குறிப்பிட்ட ஒரு தொகையை கமிஷனாக தருவோம் என்று தெரிவித்துள்ளனர். இது உண்மை என்று நம்பிய சௌந்தர்யா, 5000 ரூபாய் பணம் கட்டியுள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் குறிப்பிட்டபடி சௌந்தர்யாவுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் தரவில்லை. இருவரும் விடுதியில் இருந்து திடீரென்று எஸ்கேப் ஆகிவிட்டனர். அவர்களின் தொடர்பு எண்ணும் துண்டிக்கப்பட்டு இருந்தது. 

 

இந்தநிலையில் கடந்த 3ஆம் தேதி கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் அதே மொபைல் எண்ணை குறிப்பிட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்ற போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்த சௌந்தர்யா, அவர்கள் போஸ்டரில் குறிப்பிட்டிருந்த விடுதியின் மீட்டிங் ஹாலுக்கு நேரில் சென்று அவர்களை சந்தித்து தான் கொடுத்த 5000 பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அவர்கள் மறுநாள் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளும்படி கூறி உள்ளனர். ஆனால், மறுநாள் அவர்கள் இருவரும் மீண்டும் விடுதியை காலி செய்துவிட்டு எஸ்கேப் ஆகி விட்டனர். 

 

இதனால், சௌந்தர்யா, கள்ளக்குறிச்சி காவல் நிலையம் சென்று போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபர்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அந்தவிடுதி பதிவேட்டில் அவர்கள் குறிப்பிட்டிருந்த முகவரியை வைத்து தேடிச் சென்று அவர்கள் இருவரிடம் விசாரணை நடத்தினர். அவ்விசாரணையில், அவர்கள் தான் சௌந்தர்யாவிடம் மோசடியாக பணம் பறித்த ராஜேஷ், திலீப்குமார் என்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.