Skip to main content

5 லட்சம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய அரசு அதிகாரி

Published on 10/02/2023 | Edited on 10/02/2023

 

Assistant Director Minerals and Mines Department caught red-handed for taking bribe
ஸ்ரீதரன்

 

திருச்சி கே.கே நகரைச் சேர்ந்தவர் ஆல்பர்ட். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பூலான்சேரி கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது. அந்த நிலத்தில் அம்மையப்பா ப்ளூ மெட்டல்ஸ் என்ற பெயரில் கல்குவாரி அமைக்க அனுமதி வேண்டி கடந்த 2-6-2022 அன்று திருச்சி கனிமம் மற்றும் சுரங்க துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இவரது விண்ணப்பம் முசிறி வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு அனுப்பப்பட்டு கள ஆய்வு செய்து இவரது விண்ணப்பம் மீண்டும் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு வந்துள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து இவரது விண்ணப்பம் வந்து மூன்று மாதங்கள் ஆகியும் உதவி இயக்குநர் அலுவலகத்தில் எந்த நடவடிக்கையும் இல்லாததால், ஆல்பர்ட் நேரில் சென்று உதவி இயக்குநர் ஸ்ரீதரனை கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீதரன், தான் நேரில் வந்து கள ஆய்வு செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு கடந்த 7-2-2023 அன்று முசிறி பூலாஞ்சேரி சென்று ஆல்பர்ட்டின் இடத்தை ஆய்வு செய்துள்ளார். ஆய்வு செய்து முடித்தவுடன் “உங்களது ஆவணங்கள் எல்லாம் சரியாக உள்ளது. எனவே எனக்கு நீங்க செய்ய வேண்டியத செஞ்சா உங்களுக்கு கல்குவாரி அமைக்க அனுமதி கொடுத்திடுவேன்” என்று சொல்லி உள்ளார். அதற்கு ஆல்பர்ட் ஸ்ரீதரனிடம் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு உதவி இயக்குநர் ஸ்ரீதரன் “5 லட்ச ரூபாய் எனக்கு கொடுத்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு பர்மிட் கிடைக்கறதுக்கு ஏற்பாடு பண்றேன். அதுக்கு அட்வான்சா மூணு லட்ச ரூபாயை வரும் வெள்ளிக்கிழமை என் ஆபீசில் வந்து கொடுத்திடுங்க, ஆர்டர் போட்டு கொடுத்ததுக்கப்புறம் மீதி 2 லட்சத்த குடுங்க” என்று கூறியுள்ளார்.  

 

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆல்பர்ட், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்து டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையின் பேரில், இன்று 10.2.2023 மதியம் திருச்சி உதவி இயக்குநர், கனிமம் மற்றும் சுரங்க துறை அலுவலகத்தில் ஆல்பர்ட்டிடம் உதவி இயக்குநர் ஸ்ரீதரன் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.