Skip to main content

பூ வியாபாரி தற்கொலை! வீடியோவால் சிக்கும் அதிகாரி! 

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

Arani land patta issue  Officer caught by video

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ளது நடுக்குப்பம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான பூ வியாபாரி பிரபு. இவருக்கு சரண்யா என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர்.

 

பிரபு குடும்பத்துக்கு சொந்தமான பூர்வீக சொத்து சம்மந்தமாக அண்ணன் தம்பிகள் மூன்று நபர்களுக்கிடையே பிரச்சனை எழுந்து பாகம் பிரித்துக்கொண்டுள்ளனர். தனது பெயரிலான சொத்தை தனியாகப் பிரித்து பட்டா வழங்க நடுக்குப்பம் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்துள்ளார் பிரபு. 

 

பட்டா மாற்றித் தர வி.ஏ.ஓ. சீனிவாசன் என்பவர் ரூ. 10 ஆயிரம் ரொக்க பணம் லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது. இது சம்மந்தமாக கடந்த ஒருமாத காலமாக பட்டா கேட்டு தொடர்ந்து வி.ஏ.ஓ அலுவலகத்திற்குச் சென்று வந்துள்ளார் பிரபு. வி.ஏ.ஓ தொடர்ந்து அலைக்கழித்ததால் மனமுடைந்த பிரபு, அக்டோபர் 20ஆம் தேதி நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள ஊத்துக்காட்டு எல்லையம்மன் ஆலயத்தில் அருகேயுள்ள குளத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

 

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ பதிவு ஓன்றை பூ வியாபாரி பிரபு வெளியிட்டுள்ளார். அதில், பூர்வீக சொத்து சம்மந்தமாக பட்டா மாற்றம் செய்வதற்கு வி.ஏ.ஓ. சீனிவாசன் என்பவர் 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், அதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் பிரபாவதியின் கணவர் துரை என்பவர் உடந்தை என்றும், தான் இறந்த பின்பு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

 

இந்த ஃபேஸ்புக் லைவ் வீடியோ பதிவைப் பார்த்து ஊர் பொதுமக்கள் குளத்தில் சென்று பார்த்தபோது பூ வியாபாரி குளத்தில் மிதந்தபடி சடலமாகக் கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த களம்பூர் போலீசார் பூ வியாபாரி பிரபுவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

பட்டா மாறுதலுக்கு வி.ஏ.ஓ லஞ்சம் கேட்டதாக கூறி பூ வியாபாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

ஆரணி காங்கிரஸ் எம்.பி. கடலூர் வேட்பாளராக அறிவிப்பு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Arani Congress MP Cuddalore candidate announcement

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, திட்டக்குடி, மற்றும் நெய்வேலி சட்டமன்ற ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் வருகிற பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இயக்குநர் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆரணி தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் மருத்துவர் எம்.கே விஷ்ணுபிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் செயல் தலைவராக உள்ளார். மேலும் இவர் கடந்த 2006 முதல் 2011 வரை செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி ஆவார். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் செய்யாறு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் செய்யாறு சிப்காட் தொழில் பூங்காவை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த புறவழிச்சாலை அனுமதி பெற்று ஓச்சேரி பாலத்தை கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆரணி தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதால் இவர் கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.