Skip to main content

அலறும் ஆரணி... தவிக்கும் மக்கள்!- கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்

Published on 04/07/2020 | Edited on 04/07/2020
corona rate in arani

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு சுகாதார மாவட்டங்கள் உள்ளன, திருவண்ணாமலை சுகாதார மாவட்டம், செய்யார் சுகாதார மாவட்டம். தற்போதைய நிலையில் இரண்டு சுகாதார மாவட்டத்திலும் சேர்த்து 2,354 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தங்கவைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். நோயாளிகளின் உறவினர்களும் தனித்து வைக்கப்பட்டு கண்காணித்து நோய் தொற்று உருவானவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தை விட செய்யார் சுகாதார மாவட்டத்தில் அதிகளவில் கரோனா பாதிப்பு மற்றும் பரவல் அதிகமாகவுள்ளது. அதாவது 1,500 பேர் அந்த சுகாதார மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். இதுபற்றி நம்மிடம் பேசிய மருத்துவர்கள், வந்தவாசி, செய்யார், வெம்பாக்கம் தாலுகாக்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள பகுதிகள். அதோடு சென்னைக்கு அதிகளவு வேலைக்கு சென்றவர்கள் இந்த பகுதியில் இருந்து சென்றவர்கள்தான்.

அங்கு லாக்டவுன் போட்டபிறகு தங்களது சொந்த ஊர் திரும்பியவர்கள் முறையாக பதிவு செய்து பரிசோதனை செய்துக்கொள்ளவில்லை. கிராம அளவில் அமைக்கப்பட்ட கமிட்டிகளும் அதனை கண்காணிக்கவில்லை. இதனால் தொற்று பரவிவிட்டது. அதனால்தான் தற்போது நேரடியாக பாதிக்கப்பட்டவர்களைவிட பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தொற்று ஏற்பட்டவர்கள் அதிகமாக வருகிறது என்கிறார்கள்.

இந்நிலையில் ஆரணி நகரத்தில் ஊரடங்கு உள்ளதா என கேள்வி எழுப்பும் நிலையிலேயே உள்ளது என்கிற குற்றச்சாட்டை வியாபாரிகளும், சமூகநல ஆர்வலர்களுமே எழுப்பி வருகின்றனர். ஆரணியை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள் தங்கள் தேவைக்கு ஆரணி நகருக்கே வருகின்றனர். அப்படி வரும் பொதுமக்களிடம் வியாபாரிகள், வியாபார நிறுவனங்கள் என எங்கும் சமூக இடைவெளியை சுத்தமாக கடைபிடிக்கவில்லை, இதனால் நகரில் இருந்து கிராமத்துக்கும் கிராமத்தில் இருந்து நகருக்கும் நோய் பரவுகிறது.

கடைகள், நிறுவனங்கள், மார்க்கெட் பகுதிகள் என எங்கும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. குறிப்பாக ஆரணியின் மிக பிரபலமான பாரி பேக்கரி, அமர் கேண்டீன், ராஜா துணிக்கடை, ஸ்டார் பிரியாணி கடைகள் என எங்கும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. இதனால் காவல்துறையும் கண்டும் காணாமலே இருக்கிறது. இதுபற்றி சமூக வலைதளங்களில் பலர் குறைபட்டும் காவல்துறை, நகராட்சி, வருவாய்த்துறை என யாரும் கண்டுக்கொள்ளவில்லை.

இதுப்பற்றி அதிகாரி ஒருவரிடம் நாம் கேட்டபோது, “ஆரணி நகரம் என்பது அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் தொகுதிக்குள் வருகிறது. ஆரணியில் இருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள சேவூர்தான் அமைச்சரின் ஊர். கடைக்காரர்கள் பலரும் நான் அமைச்சரின் ஆள் என்கிறார்கள். பாரி பேக்கரியில் எந்நேரமும் கூட்டம் குவிகிறது. சிறிய கடை கூட்டம் நெருக்கியடித்து நிற்கிறது. சமூக இடைவெளி என்றால் என்னவென்று கேட்கிறார்கள் அந்த கடையில் பணியாற்றும் ஊழியர்களே. அந்த பேக்கரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. காரணம், அது அமைச்சரின் வலதுகரமாக உள்ள அதிமுக பிரமுகரும், பால் கூட்டுறவு சங்க மாவட்ட துணை தலைவருமான பாபுவின் கடையது. விதிமுறையை கடைப்பிடிக்காத அவர் கடை மீது எப்படி நடவடிக்கை எடுப்பது, இதனால் அந்த சாலையில் உள்ள எந்த கடை மீதும் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. இப்படி பல கடை உரிமையாளர்கள் அமைச்சரின் ஆள், ஆளும்கட்சி என்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை” என்றார்.

அமைச்சரின் அரசு கார் ஓட்டுநருக்கு கரோனா பாசிட்டிவ் உறுதியானதும், அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் பரிசோதனை செய்யப்பட்டனர். அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தில் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்துள்ளது. அன்று முதல் கடந்த ஒருவாரமாக அமைச்சர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்ளாமல் தனித்து வீட்டிலேயே குடும்பத்துடன் தனித்து இருக்கிறார். நெருங்கிய கட்சி பிரமுகர்களை கூட சந்திக்கவில்லை. அமைச்சர் அவ்வளவு பாதுகாப்பாக இருக்கும்போது, அவரது தொகுதி மக்கள் விவகாரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.