Skip to main content

“அ.தி.மு.க. ஆட்சியில் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்தாமல் இழுத்தடிக்கின்றன” - ஞானமூர்த்தி

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

“The AIADMK The regime is dragging negotiating a pay rise ”- Gnanamurthy
                                                        மாதிரி படம் 


பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அனைத்து தொழிற்சங்கங்களும் நேற்று (12/01/2021) காலை 11 மணியிலிருந்து இரவு 7 மணிவரை உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு போரட்டத்தைக் கைவிட்டனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பெரம்பலூர் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ஞானமூர்த்தி, ‘பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அனைத்து தொழிற்சங்கங்களும் நேற்று (12-1-2021) காலை 11 மணியிலிருந்து இரவு 7 மணிவரை உள்ளிருப்பு வேலை நிறுத்தம் நடத்தியுள்ளனர்.

 

அதிகாரிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு இரவு 7 மணிக்கு ஆலை அரவை துவங்கியிருக்கிறது. நேற்று மட்டும் சுமார் 120 டிராக்டர்கள் கரும்பு லோடோடு ஆலை முன்பாக நிறுத்தப்பட்டிருந்தது. எங்கே வேலைநிறுத்தம் தொடருமோ என்ற கவலையில் நாங்கள் இருந்தாலும் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. 

 

தமிழ்நாட்டில் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளும், 13 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும் உள்ளன. இதில் தற்போது 5 ஆலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதில் அரசின் அலட்சியப் போக்காலும், நிர்வாக குளறுபடியாலும், தவறான சர்க்கரை கொள்கையாலும், ஆலைகளுக்கு உதிரிபாகங்கள் வாங்குவதில் நடைபெறும் முறைகேடுகளாலும் 10 சர்க்கரை ஆலைகள் மூடப்படும் அபாயம் உள்ளது. 

 

சர்க்கரை ஆலை தொழிலாளிகளுக்கு இரு வேறு விதமான சம்பளம் வழங்கப்படுகிறது. பொதுத் தொகுப்பு பணியாளர்களுக்கு அரசுக்கு நிகரான சம்பளமும், படியும், ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வழங்கப்படுகிறது. ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேஜ் போர்டு ஊதியம் வழங்கப்படுகிறது. அதிலும் 11 நாளைக்கு ஒருநாள் சம்பளத்துடன் விடுப்பு என்கிற வேஜ போர்டு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தவில்லை. 

 

முப்பது ஆண்டுகளாக பணிபுரியும் மூத்த தொழிலாளர்களுக்குக் கூட 22,000த்திற்கும் மேல் ஊதியம் பெற முடியவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்தாமல் கடந்த 10 ஆண்டுகளாக இழுத்தடிக்கின்றன. இந்த பத்து ஆண்டுகளில் மூன்று ஆண்டுகளுக்கு ‌ஒருமுறை என்று மூன்று பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். 

 

இடைக்கால நிவாரணம் என்று 2,000 ரூபாய் மட்டுமே வழங்கி தொழிலாளர்களை ஏமாற்றி வருகின்றனர். இதன் காரணமாகவும், தற்சமயம் ஈட்டிய விடுப்பிற்கான ஒப்படைப்பு சம்பளம் வழங்கக் கோரியும் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

 

சம்பள உயர்வு தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தும் தொழிலாளர்களை அலட்சியபடுத்தி வருகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில், சர்க்கரைத் துறை பெரும் நட்டத்திற்கு தள்ளப்பட்டு, ஆலைகளைத் தனியாருக்கு தாரைவாற்கும் நிலைக்குத் தள்ளிவிட்டனர். 

 

எடப்பாடி பழனிசாமி அரசு தொழிலாளர்களை அட்சியப்படுத்தாமல் அழைத்துப் பேசி, பொதுத்தொகுப்பு ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளம் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சரமாரியாகத் தாக்கிய மகன்; கடைசி வரைக்கும் காட்டிக்கொடுக்காத தந்தை - அதிரவைக்கும் சம்பவம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
The son beaten his father in a property dispute

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் உள்ள, தலைவாசல் வடகுமரை கிராமத்தில் செயல்பட்டு வருகிறது அமிர்தா சேகோ எனும் தொழிற்சாலை. இதன் உரிமையாளர் குழந்தைவேலு. இவரின் மனைவி ஹேமா. இந்தத் தம்பதிக்கு சக்திவேல் என்ற மகனும், மகளும் இருக்கின்றனர். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இருவரும் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். குழந்தை வேலுவின் மகன் சக்திவேல் பி.டெக், எம்.பி.ஏ படித்துவிட்டு, தந்தையின் தொழிற்சாலைகளைக் கவனித்து வந்துள்ளார்.

கடந்த ஐந்து வருடமாக சக்திவேல் அமிர்தா சேகோ தொழிற்சாலையை நிர்வகித்து வந்துள்ளார். இந்தநிலையில், சக்திவேல் தொழிலில் கடந்த சில மாதங்களாக பெரும் பின்னடவை சந்தித்துள்ளார். இதனால் வெளியே கடன் வாங்கி தொழிலை நடத்தியுள்ளார். இதனால் அதிக கடனுக்கு ஆளாகியுள்ளார். ஒருகட்டத்தில், மகன் கடன்வாங்கி தொழில் நட்த்திவருவது, தந்தை குழந்தைவேலுக்கு தெரியவரவே இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

ஏகப்பட்ட கடனில் சிக்கியதற்கு மகனின் பொறுப்பற்ற நிர்வாகத் திறனே காரணம் என முடிவுக்கு வந்த தந்தை, அவரது நிர்வாகத்தில் எவ்வித தலையீடும் செய்யவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால், தொழிற்சாலை ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதில்கூட சிரமத்தைச் சந்தித்துள்ளார் மகன் சக்திவேல். இதனால் தந்தைக்கு பெரம்பலூரில் உள்ள ரைஸ் மில்லின் பணத்தை எடுத்து பயன்படுத்த விரும்பியுள்ளார். ஆனால், பெரம்பலூர் தொழிற்சாலையில் குழந்தைவேலுவுக்கு 50 சதவிகித பங்கும், குழந்தை வேலுவின் மாமனார் குடும்பத்திற்கு கணிசமான பங்கும் இருந்துள்ளது. குழந்தைவேலுதான் முழுமையாக அதனைப் பார்த்து வந்துள்ளார். பணம் இருந்தும் தந்தை, தனது கடன் பிரச்சனைக்கு உதவவில்லை எனக் குழந்தைவேலு மீது மகன் சக்திவேல் ஆத்திரத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள திண்ணையில் குழந்தைவேலு உட்கார்ந்திருந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, சக்திவேல் அவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். பின்னர், குழந்தைவேலுவைத் தனது இரண்டு கைகளால் மாறி மாறி சக்திவேல் தாக்கி உள்ளார். இதைக்கண்ட குழந்தைவேலுவின் மனைவி ஹேமா மற்றும் வேலையாட்கள் சக்திவேலினை வந்து பிடித்து தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத சக்திவேல், தனது தந்தையை முகத்தில் தாக்கி உள்ளார். இதில் நிலைகுலைந்துபோன குழந்தைவேலு உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து கைகளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எஸ்.ஐ பழனிசாமி விசாரணை நடத்தியுள்ளார். மறுபுறம், சிகிச்சை முடிந்து வெளியேவந்த குழந்தைவேலு தனக்கும், தன் மகனுக்கும் உள்ள பிரச்னையைத் தாங்களே பேசி முடித்துக் கொள்வதாக எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பிய இரண்டு நாட்களில் குழந்தைவேலு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் குழந்தைவேலுவை பிப்ரவரி 16 அன்று சக்திவேல் தாக்கியது, அவர்களது வீட்டில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதன் மூலம் கைகளத்தூர் போலீஸார் சக்திவேலினை கைதுசெய்து மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடைசிவரை மகனைக் காட்டிக் கொடுக்காமல் இருந்த தந்தை அவமானம் தாங்காமல் மருந்து குடித்து உயிரை மாய்த்துக்கொன்டாலும், தற்போது இரண்டு மாதங்களுக்கு பிறகு உண்மை வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.