Skip to main content

ஜெயலலிதாவிற்காக உயிரைக் கொடுத்த அ.தி.மு.க தொண்டனின் குடும்பம்; கிழிந்த சேலைகளே சுவர்களாய்... நன்றாய் படித்தும் படிக்க வழியில்லாமல் நிற்கிறார்கள்...

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்க முடியவில்லை என்பதை நினைத்தே மாரடைப்பால் மரணம் அடைந்த அ.தி.மு.க வின் உண்மை தொண்டனின் குடும்பம் இன்று சின்ன சின்னக் குழந்தைகளுடன் நாதியற்று நிற்கிறது. 

 

murugan

 

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (40) எலக்ட்ரீசியன். 2015 காலகட்டத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் ஜெயலலிதா முதலமைச்சர் ஆக முடியாமல் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் அ.தி.மு.க தொண்டர்கள் பல்வேறு முடிவுகளை எடுத்தனர். அப்படிதான் மே 21 ந் தேதி காலை அதே பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் நடந்த ஜெயலலிதா பற்றிய காரசார விவாதத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவின் விசுவாசி முருகன் நெஞ்சுவலியால் விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மற்றும் மாஜி ஊராட்சி மன்றத் தலைவர் தயாளன் உள்பட பலரும் முருகனை மீட்டு அருகில் இருந்த அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் முருகன் மரணமடைந்திருந்தார். ஜெயலலிதாவுக்காக உயிரை கொடுத்த முருகனுக்கு அ.தி.மு.க.வினர் அ.தி.மு.க கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

 

murugan

 

கட்சி தலைமை முருகன் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியும், குழந்தைகளின் படிப்பு செலவையும் ஏற்கும் என்று அந்த நேரத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் சொல்லிச் சென்றுள்ளனர். நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. தற்போது முருகனின் மூத்த மகள் பிளஸ் டூ-வில் 404 மார்க் வாங்கிவிட்டு மேலே படிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து உள்ள 10 வயது இரட்டைக்குழந்தைகள் 6-ம் வகுப்பு போக தயாராக உள்ளனர். கூலி வேலைக்கு செல்லும் தாயால் எதுவும் செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கிறார்.
 

இதுகுறித்து முருகனின் மனைவி கூறும்போது, “அம்மா அம்மான்னு உயிரை விடுவார். ஒரு நாள் அம்மா ஜெயலலிதா பதவி ஏற்க முடியாம செய்றாங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தவர். கடைக்கு டீ குடிக்க போனார். டீ குடிச்ச கையோட மாரடைப்பு வந்து விழுந்து இறந்துட்டாரு. அ.தி.மு.க.காரங்க வந்து கொடி போர்த்திட்டு ரூ. 3 லட்சம் நிதி வரும்னு சொல்லிட்டு போனாங்க. இதுவரை அவங்களும் வரல. நிதியும் வரல. அம்மாவுக்காக உயிரை விட்டவருக்கு அவங்க கொடுக்க சொன்ன நிதியை கூட கொடுக்கல. 3 சின்னப் பிள்ளைகளை வச்சுக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறேன். கஜா புயல் வந்தப்ப வீட்டு மேல இருந்த சிமென்ட் சீட் எல்லாம் உடைஞ்சு போச்சு. கொட்டுற மழையில அடிக்கிற காத்துல 4 பேரும் கட்டிபிடிச்சுக்கிட்டு உக்காந்திருந்தோம். 3 மாசம் கழிச்சு ஒரு தொண்டு நிறுவனம் சிமென்ட் சீட் வாங்கி கொடுத்தாங்க. அதை தான் மேல் கூரையா போட்டு சுற்றிலும் கிழிஞ்ச சேலைகளை சுவரா கட்டி வச்சு மழை, வெயில், பனி, காத்துன்னு குழந்தைகளை காப்பாத்தி வச்சிருக்கேன்.

 

murugan


இப்ப மூத்த பொண்ணு கொத்தமங்கலம் அரசு பள்ளியில படிச்சு, பிளஸ் டூ வுல 404 மார்க் வாங்கி இருக்கு. மேல படிக்க வைக்க எந்த வசதியும் இல்லை. நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளைக்கு மனு போட்டிருக்கு. படிப்பு முடிச்சதும் வேலை கிடைச்சா மற்ற 2 குழந்தைகளின் படிப்புச் செலவை என் மூத்த பொண்ணு கவணிச்சுக்கும். ஆனா எப்படி கிடைக்கப் போகுதுன்னு தெரியல.
 

அ.தி.மு.க அறிவிச்ச அந்த ரூ 3 லட்சத்தை கொடுத்தாலாவது குழந்தைகளை படிக்க வைப்பேன். எதுவும் கிடைக்கல. அ.தி.மு.க - அம்மா-வுக்காக உயிரைக் கொடுத்தவர் குடும்பத்துக்கு அந்த கட்சி செஞ்சது ஒன்றுமே இல்ல” என்று கலங்கினார். குழந்தைகளின் படிப்புக்காக உதவிகள் கிடைத்தால் அது போதும் என்றார். அருகில் நின்ற குழந்தைகள் கண்கலங்கி நின்றனர். அதிகாரப் போட்டியில் இருக்கும் அ.தி.மு.க தலைமை இது போல ஜெயலலிதாவுக்காக உயிரை கொடுத்த உண்மை தொண்டர்களின் குடும்பம் பற்றி அறியவில்லையா? அறிந்தும் கண்டுகொள்ளவில்லையா? பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.