ஆடி மாதத்தில் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளை பூஜிக்கும் விதமாக ஆடிப்பூரம் விழா நடப்பது வழக்கம். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டையில் பிறந்து கரூரில் உள்ள காவிரி ஆற்றில் கலக்கும் அமராவதி ஆறு, வருடத்தின் பெரும்பாலான நாட்களில் நீரின்றி இருக்கும். பல வருடங்களாக அமராவதி ஆறு வற்றாத ஆறாக இருந்த நிலையில் அண்மைக்காலமாக வருடம் முழுவதும் காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆயினும்,கடந்த சில வருடங்களாக ஆடி மாதத்தில் அமராவதி அணைக்கு பெருக்கெடுத்து வரும் நீரால் உபரி நீரை அமராவதி ஆற்றில் திறக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலை தொடர வேண்டும் என்பதற்காக கரூரில் அமராவதி ஆற்றுக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்வை வாழும் கலை அமைப்பினர் நடத்தினர். இந்த நிகழ்வில், அகில உலக துறவிகள் தலைவர் ராமானந்த மகராஜ், கரூர் உலக சிவனடியார் திருக்கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவா சதீஷ், நெரூர் கைலாச ஆசிரமம் அமர்நாத் சுவாமிகள், சின்மானந்தா சரஸ்வதி சுவாமி, இந்து முன்னணி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர், பக்தர்கள், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அமராவதி ஆற்றங்கரையில் சிறப்பு பூஜைகள் நடத்தினர். பின்னர் அமராவதி ஆற்றுக்கு தீபாராதனை காட்டினர்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கற்பூர ஜோதியை ஏற்றி அமராவதி ஆற்றில் விட்டு அமராவதி ஆற்றை வணங்கினர். நிறைவாக பூஜை செய்த அனைத்து பொருட்களையும் அமராவதி ஆற்றில் கரைத்து அமராவதியை வணங்கி தரிசனம் மேற்கொண்டனர்.