Skip to main content

9 ஆண்டுகளாக தண்ணி காட்டிய குற்றவாளி; ஆந்திராவில் வைத்து தூக்கிய தமிழக போலீஸ் 

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

accused who was absconding for 9 years after being out on bail was arrested

 

கடலூர் மாநகராட்சியில் உள்ள புதுப்பேட்டை கான்வென்ட் தெருவில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தார் 49 வயது அருளரசு. இவருக்கும் தேவனாம்பட்டினம் போட் மேன் தெருவை சேர்ந்த 38 வயது கணேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி தனது ஹோட்டலில் பணிகளை முடித்துக் கொண்டு வீட்டுக்கு காரில் ஏறி புறப்பட்ட அருளரசை கணேஷ் வழிமறித்துள்ளார்.

 

ஏற்கனவே கணேஷ் மீது காவல் நிலையத்தில் அருளரசு கொடுத்திருந்த புகாரை வாபஸ் வாங்குமாறு கணேஷ் பலமுறை எச்சரித்துள்ளார். ஆனாலும், வழக்கை வாபஸ் வாங்க அருளரசு மறுத்துவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் ஏற்கனவே தயாராக வைத்திருந்த கத்தியால் அருளரசை சரமாரியாக குத்தினார் சம்படத்திலேயே அருளரசு உயிரிழந்த நிலையில், இந்த கொலை தொடர்பாக, கடலூர் துறைமுகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்  

 

இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் மூலம் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த கணேஷ், அதன் பிறகு வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். கணேசை போலீசார் பல்வேறு இடங்களில் தேடினர். அவர் இருக்கும் இடம் குறித்த எந்த தகவலும் இல்லாததால், அவரது உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் அவர்கள் ஒரு கட்டத்தில் கணேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் இதனை நம்பாமல் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர்.

 

இதற்கிடையே மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ளவர்களின் முடிக்கமுடியாமல் இருக்கக்கூடிய வழக்குகள் சம்பந்தமாக ஆய்வு கூட்டம் ஒன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அருளரசை கொலை செய்த குற்றவாளி கணேஷ் தலைமறைவாக இருப்பதைக் கண்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், கடலூர் டிஎஸ்பி பிரபு தலைமையில் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த ஆறு மாதமாக கணேஷை தீவிரமாக தேடி வந்தனர்.

 

இந்த நிலையில் கணேஷ் புவனகிரி பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக புவனகிரி சென்ற போலீசார், அந்த பெண் மற்றும் அவரது உறவினர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தினர். மேலும் அவர்களது செல்போன் எண்ணையும் போலீசார் கண்காணித்து வந்த நிலையில் கணேஷ் ஆந்திர மாநிலம் நகரியில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.  

 

இதனைத் தொடர்ந்து ஆந்திரா விரைந்த போலீசார், கணேஷ் பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்து கைது செய்து பலத்த பாதுகாப்புடன் கடலூருக்கு அழைத்து வந்துள்ளனர். ஜாமீன் பெற்று நீதிமன்றத்திற்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றத்திற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த 9 ஆண்டுகளாக கொலை வழக்கில் காவல்துறைக்கு தண்ணி காட்டிவிட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் ரகசியமான முறையில் கைது செய்துள்ள சம்பவம், கடலூர் மாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.