Skip to main content

"குடியரசுத் தலைவரிடம் விருது வாங்கியது மறக்க முடியாத நிகழ்வு"- நடிகர் சூர்யா நெகிழ்ச்சி! 

Published on 30/09/2022 | Edited on 30/09/2022

 

68 national film awards at delhi actor surya interview

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று (30/09/2022) மாலை 04.00 மணிக்கு நடைபெற்ற 2020- ஆம் ஆண்டிற்கான 68- வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, விருதுக்கு தேர்வானவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். 

 

68 national film awards at delhi actor surya interview

அதன்படி, சூரரைப்போற்று படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. அதேபோல்,  சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்த நடிகை அபர்ணா முரளிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதைப் பெற்றார். 

 

68 national film awards at delhi actor surya interview

சூரரைப்போற்று திரைப்படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. சூரரைப்போற்று திரைப்படத்தைத் தயாரித்த 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துக்கு சிறந்த படத்தைத் தயாரித்தற்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை நடிகை ஜோதிகா பெற்றுக் கொண்டார். 

 

68 national film awards at delhi actor surya interview

பின்னர், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த நடிகர் சூர்யா, "விருது வழங்கிய இந்திய அரசுக்கும், தேசிய திரைப்பட விருது தேர்வுக் குழுவுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குடியரசுத் தலைவரிடம் விருது வாங்கியது மறக்க முடியாத நிகழ்வு. குறிப்பாக, சுதா கொங்கராவுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் பத்தாது. எனது கரியர்ல இது ரொம்ப ரொம்ப முக்கியமான படம். ரொம்ப நாளாக நான் வேண்டிக் கொண்டிருந்த படமாகக் கூட இதை நான் பார்க்கிறேன். 

 

68 national film awards at delhi actor surya interview

எண்டயர் டீமுக்கும் நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். அவர்கள் ஒருத்தர் இல்லாமல் கூட, இந்த படம் இந்த அளவுக்கு ஸ்பெஷலாக இருந்திருக்காது. ஒரே ஆண்டில் ஐந்து விருதுகளைப் பெறுவது சாதாரண விஷயம் இல்லை. இந்த படமும் முதலில் கதையைப் படித்தது, பார்த்தது, ஜோதிகா தான். அவங்களுடைய மனசு இதில் இருந்தது. ஜோதிகா மேடைக்கு சென்று விருது வாங்கியது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. எனது ரசிகர்களுக்கும், உலக சினிமா ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி" எனத் தெரிவித்துள்ளார். 

 

68 national film awards at delhi actor surya interview

இதனிடையே, நடிகர் சூர்யா விருது பெறும் போது, அவரது மனைவி நடிகை ஜோதிகா தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார். அதேபோல், தனது மனைவி ஜோதிகா விருது பெறும் போது, சூர்யா தனது செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது ஃ பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவிபேட் தொடர்பான வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case related to VVPAT Judgment in the Supreme Court today

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் (24.04.2024) விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா?. மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி  ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

இதனையடுத்து, “தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்குகிறது. 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.