Skip to main content

அந்தியூர் வனப்பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க யானை உயிரிழப்பு!

Published on 12/01/2021 | Edited on 12/01/2021
Forester fired

 

ஈரோடு மாவட்டம் அந்தியூரையடுத்துள்ள மலைப் பகுதிகளில் யானை, சிறுத்தை, புலி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. சென்னம்பட்டி வனச்சரகத்தில் மேற்குப் பீட் வனப் பகுதிகளில் இன்று வனத்துறையினர் வழக்கமான ரோந்து சென்றபோது கோவிலூர் புதுக்காடு வனப்பகுதியில் ஒரு யானை இறந்துக் கிடப்பதை கண்ட பணியாளர்கள், சென்னம்பட்டி வனச்சரக அலுவலர் செங்கோட்டையனுக்கு தகவல் கொடுத்தனர்.

 

சம்பவ இடத்துக்கு சென்ற வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவின் உதவியுடன் அந்த இடத்திலேயே யானையை உடற்கூறு ஆய்வு செய்தனர். இதில் உயிரிழந்த யானை சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பதும், வயது முதிர்ச்சி காரணமாக சரிவர உணவு உட்கொள்ள முடியாமல் உயிரிழந்துள்ளதாகவும் மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

 

இதையடுத்து சென்னம்பட்டி வனத்துறையினர் சம்பவ இடத்திலே அந்த யானையின் சடலத்தை வன விலங்குகள் உணவுக்காக விட்டு விட்டனர். 2 மீட்டர் நீளம் கொண்ட அந்த யானையின் தந்தத்தை அதன் உடலிலிருந்து எடுத்த வனத்துறையினர் அதை பாதுகாப்பாக கொண்டு சென்றனர். வயது முதிர்ச்சி காரணமாக உயிரிழக்கும் யானைகளை தடுக்கும் வகையில் வனத்துறையினர் சிறப்பு கவனம் செலுத்தி யானைகளை பாதுகாக்க வேண்டுமென வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.