Skip to main content

5 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல்... 3 பேர் கைது!!

Published on 21/06/2021 | Edited on 21/06/2021
5 ton ration rice confiscated with mini truck ... 3 arrested

 

திருப்பத்தூர் மாவட்ட பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன. அதன்பேரில் வேலூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில் போலீசார் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதியில் ஜூன் 20ஆம் தேதி இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்போது வாணியம்பாடியிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த மினி லாரியைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அதில் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த 39 வயதான டிரைவர் பெருமாள், அவருடன் வந்த 21 வயதான சஞ்சீவி ஆகியோரை கைது செய்தனர். இதேபோல் உமாராபாத் பகுதியில் ரோந்து சென்றபோது, அப்பகுதி மக்கள் அளித்த ரகசிய தகவலின் பேரில் பிச்சைமுத்து என்பவர் வீட்டின் அருகே கடத்துவதற்காக பதுக்கிவைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரசியைப் பறிமுதல் செய்தனர்.

 

இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த வேலூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் 35 வயதான பிச்சைமுத்து என்பவரை கைது செய்தனர். லாரியில் இருந்த 4 டன் ரேஷன் அரிசி, சாலையில் இருந்த ஒரு டன் அரிசி என 5 டன் அரிசியை அரசுக்கிடங்கில் ஒப்படைத்தனர். லாரியையும் பறிமுதல் செய்தனர். இரண்டு வழக்கிலும் இன்னும் இதன் பின்னால் யார், யார் உள்ளார்கள் என கைதானவர்களிடம் விசாரணை நடத்திவருகிறார்கள் போலீஸார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மாயமான சிறுமி! போலீஸ் அலட்சியத்தால் தந்தை விபரீத முடிவு 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Girl Child missing police investigation

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஈச்சங்கால் பகுதியைச் சேர்ந்த 25 வயதான சபரியும் பள்ளி மாணவியும் சில மாதங்களாக  காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி விடியற்காலை 4 மணியளவில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர்கள் தனது மகள் காணாமல் போனதாக கடந்த 18ஆம் தேதி அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அச்சிறுமியின் தந்தை மற்றும் அவருடைய குடும்பத்தினர் அம்பலூர் காவல் நிலையத்திற்கு வருகை தனது மகளை கண்டுபிடித்தீர்களா? என கேட்கும் பொழுது காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மாணவியின் பெற்றோர்களை தரக்குறைவாக பேசி சிறுமியின் சித்தப்பாவை தாக்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மீண்டும் நேற்று மாலை அம்பலூர் காவல் நிலையம் முன்பு வந்து தங்களது மகளை கண்டுபிடித்து தரக் கூறியும், தங்களை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டு இருந்த போது, சிறுமியின் தந்தை தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ குளிக்க முயன்றார். இதன் காரணமாக அம்பலூர் காவல் நிலையம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.