Skip to main content

வாணியம்பாடியில் கோர விபத்து; பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பலி

Published on 01/03/2023 | Edited on 01/03/2023

 

3 school students passed away in a road accident in Vaniyambadi

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமம் மற்றும் இதனை சுற்றியுள்ள சில கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் கிரிசமுத்திரம் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்து படித்து வருகின்றனர்.

 

கூலித் தொழிலாளியான சாமுவின் 13 வயது மகன் ரபீக் 8 ஆம் வகுப்பும், ராஜியின் மகன் விஜய் 8 ஆம் வகுப்பும் படித்து வந்தனர். ராஜியின் மற்றொரு மகனான சூர்யா 6 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பிப்ரவரி 28 ஆம் தேதி காலை 8 மணிக்கு ரபீக் ஒரு சைக்கிளிலும் அண்ணன் தம்பிகளான விஜய், சூர்யா இருவரும் ஒரு சைக்கிளில் சென்னை டூ பெங்களூரு தேசிய நாற்கர சாலையின் சர்வீஸ் சாலையில் ஜாலியாக பேசிக்கொண்டு சென்றுள்ளனர். அப்போது வேலூரிலிருந்து ஏலகிரிக்கு கர்நாடகா பதிவு எண் கொண்ட சிவப்பு கலர் கார் ஒன்று சிறுவர்கள் சென்ற சைக்கிள் மீது மோதியது. இரண்டு சைக்கிளில் சென்ற மூன்று சிறுவர்களும் 10 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கார் சாலையின் ஓரம் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது. அதிலிருந்து 4 இளம்பெண்கள், 3 இளைஞர்கள் இறங்கி தள்ளாடியபடி தப்பி ஓட முயன்றுள்ளனர். விபத்தைப் பார்த்து அதிர்ச்சியான வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். கார் ஓட்டி வந்த சந்தோஷ் என்பவரை பிடித்து சரமாரியாக தாக்கியவர்கள், அவர்கள் தப்பி போகாமல் பிடித்து வைத்துள்ளனர். இறந்து போன சிறுவர்களின் பெற்றோர்கள் தகவல் அறிந்து கண்ணீரோடு ஓடி வந்தவர்கள் சாலையில் இறந்து கிடந்த தங்களது குழந்தைகளின் உடல்களைப் பார்த்து கதறி அழுதனர். கோபமான அப்பகுதி பொதுமக்கள், உறவினர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்.பி பாலகிருஷ்ணன், திமுக திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவராஜ் எம்.எல்.ஏ, வாணியம்பாடி ந.செ. சாரதிகுமார் நேரில் வந்து குழந்தைகளை பறி கொடுத்த பெற்றோர்களை சமாதானம் செய்தனர். பொதுமக்களை சமாதானம் செய்த போலீசார் சாலை மறியலை கைவிட செய்தனர். இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 3 சிறார்கள் மீது மோதிய காரில் வந்தவர்கள் வேலூர் காட்பாடியில் உள்ள பிரபல நிகர்நிலை பல்கலைக்கழகம் விஐடியில் படித்துக்கொண்டு இருப்பவர்கள் என்பதும், மது விருந்திற்காக சுற்றுலாத் தலமான ஏலகிரிக்கு சென்றுகொண்டிருந்தார்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது. கார் ஓட்டி வந்த இளைஞன் சந்தோஷ் அந்த பல்கலைக்கழகத்தில் கணிப்பொறி படித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. மற்றவர்கள் குறித்த தகவலை அப்படியே காவல்துறை மறைத்துவிட்டது.

 

ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏலகிரி மலை இப்போது பணக்காரர்களின் சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது. இங்கு வந்து ஹோட்டல்களில், ரிசார்ட்டுகளில் ரூம் போட்டுவிட்டு குடி, கும்மாளம் போடுபவர்கள் போதை பவுடர்களை பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. அப்படி வரும் சென்னை, வேலூர், பெங்களுரூவைச் சேர்ந்த பணக்கார இளைஞர்கள், ஐடி இளையோர்கள் தாறுமாறாக கார், பைக் ஓட்டுவது வாடிக்கை. இவர்களின் வாகனங்கள் மற்றவர்கள் மீது மோதி இறப்பு வரை செல்கிறது அல்லது அவர்களது வாகனங்கள் சாலை தடுப்புகளின் மீது மோதி இறந்து போகிறார்கள். கார் ஓட்டுநர்கள் பெரும்பாலும் மருத்துவ பரிசோதனையின் போது போதையில் இருக்கிறார்கள் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

மேலும், ஏலகிரி மலையில் உள்ள விடுதிகள், ஹோட்டல்களில் ரெய்டு செய்து சட்டவிரோத காரியங்களில் ஈடுபடும் கும்பல்களை தடுத்தால் போதையில் தாறுமாறாக கார்களை ஓட்டிக்கொண்டு வருபவர்கள் குறைவார்கள். இதுபோன்ற போதையால் நடக்கும் விபத்துகளும் ஏதும் அறியாத இதுபோன்ற சிறார்கள் இறப்பும் குறையும் என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story

மத்திய அமைச்சரின் கார் கதவை திறந்ததால் விபத்து; பா.ஜ.க தொண்டருக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
 Tragedy of BJP worker on Union minister's car door opened in accident

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.  ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

பெங்களூர் வடக்கு உள்பட 14 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பெங்களூர் வடக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் ஷோபா போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஷோபா, தனது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தின் போது, கார் கதவை ஓட்டுநர் திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் ஷோபா, நேற்று (08-04-24) காலை வழக்கம்போல், தனது காரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார். அவரது கார், கே.ஆர்.புரம்  பகுதியில் உள்ள கோவில் அருகே சென்று போது, ஷோபாவின் கார் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி, தன்பக்கம் இருந்த கார் கதவை திடீரென திறந்துள்ளார். அப்போது, மத்திய அமைச்சரின் காருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், மத்திய அமைச்சர் காரின் கதவி மீது மோதினார். இதில், இருசக்கர வாகனத்தில் இருந்த அவர் சாலையிம் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து, கீழே விழுந்த அவர் மீது ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்து அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.ஆர்.புரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விபத்தில் பலியானவர், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (55), என்பதும், பா.ஜ.க கட்சியின் தீவிர தொண்டரான பிரகாஷ், தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. மத்திய அமைச்சர் ஷோபாவின் கார் கதவை திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் ஒருவர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.