Skip to main content

இடைத்தேர்தலில் உதயநிதி போட்டியா?

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

தி.மு.க.வின் மூத்த முன்னோடி அன்பில் தர்மலிங்கத்தின் சிலை திறப்புவிழா. அதேநாளில் திருச்சி மாவட்ட தி.மு.க.வின் கலைஞர் மாளிகையில் அண்ணா, கலைஞர் சிலை திறப்பு, அதைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா... என "முப்பெரும் விழா', கடந்த 10-ஆம் தேதி திருச்சியில் நடந்தது. அண்ணா, கலைஞர், அன்பில் தர்மலிங்கம் சிலை திறப்புவிழா மேடையில் வழக்கத்திற்கு மாறாக, மு.க.ஸ்டாலினுடன் உதயநிதியும் சபரீசனும் இருந்தனர்.

 

dmk



தென்னூர் உழவர் சந்தையில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்ட மேடையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் வரிசையில், கட்சியில் எந்தப் பதவியும் இல்லாத உதயநிதிக்கு இடம் கொடுக்கப்பட்டிருந்தது. மேடையின் முன்பு முதல் வரிசையில் ஐ.டி. விங் நிர்வாகிகளுடன் அமர்ந்திருந்தார் ஸ்டாலின் மருமகன் சபரீசன். மேடையில் அமர்ந்திருந்த தலைவர்கள் அனைவருக்கும் சால்வை போர்த்திய தி.மு.க. மா.செ. கே.என்.நேரு, கீழே அமர்ந்திருந்த சபரீசனுக்கும் சால்வை போர்த்த தவறவில்லை.

 

dmk



கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ""கடந்த சட்டமன்றத் தேர்தலில் மகேஷ் பொய்யாமொழிக்காக திருவெறும்பூர் தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்த நான், இந்த எம்.பி. தேர்தலில் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்தேன். உள்ளாட்சித் தேர்தலில் தெருத் தெருவாக பிரச்சாரம் செய்வேன். தமிழக சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் பிரச்சாரத்திற்கு தயாராக இருக்கிறேன். தி.மு.க. குடும்பக் கட்சிதான். ஆமா அன்பில் தர்மலிங்கம் தாத்தா மகேசுக்கு மட்டுமல்ல, எனக்கும் தாத்தாதான். எனது தாத்தா கலைஞர் எனக்கு மட்டுமல்ல, இப்போதிருக்கும் தி.மு.க. இளைஞர்கள் அனைவருக்கும் தாத்தாதான்''’என பேசியவர், ""இங்கே இருக்கும் திருநாவுக்கரசருக்கு ஒரு கோரிக்கை, நாங்குனேரியை தி.மு.க.வுக்கு விட்டுத்தாருங்கள், வென்று காட்டுவோம்''’என்றபோது எழுந்த கரகோஷம் அடங்க வெகுநேரம் ஆனது.


இறுதியாகப் பேசிய மு.க.ஸ்டாலின், எட்டுவழிச் சாலையால் கிடைக்கும் மூவாயிரம் கோடி கமிஷனுக்காக கொள்கையற்ற சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. நீட் தேர்வால் கடந்த ஆண்டு இரண்டுபேரை பலி கொடுத்தோம். இந்த ஆண்டு மூன்றுபேரை பலி கொடுத்திருக்கிறோம். 37 எம்.பி.க்கள் ஜெயித்து என்னசெய்யப் போகிறார்கள் எனக் கேட்கிறார்கள். நாடாளுமன்றம் கூடும்போது தெரியும் நாங்கள் என்ன செய்வோம் என்று. சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மீண்டும் ஒரு மரணஅடியைக் கொடுத்து, எடப்பாடி ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்''’என ஆவேசமானார். நாங்குனேரி தொகுதியில் காங்கிரசுக்குப் பதில் தி.மு.க. போட்டியிட்டால், உதயநிதிக்கு மக்கள் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் களமிறக்கி ஜெயிக்கலாம். அதன்பின் தி.மு.க. இளைஞரணி பொறுப்பைத் தரலாம் என மேல்மட்ட பேச்சுகள் விறுவிறுப்பாகியுள்ளன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.