Skip to main content

நாம எப்படி இருந்தோம் இப்ப எப்படி... சசிகலா அனுப்பிய கடிதத்தால் பரபரப்பு... அதிருப்தியில் அதிமுக அமைச்சர்கள்!

Published on 16/03/2020 | Edited on 16/03/2020

வளர்ப்பு மகன் கல்யாணம் நடந்த அதே சென்னை ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி. நகரில் சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்தின் திருமண வரவேற்பை நடத்தியிருக்கிறது சசிகலா குடும்பம்.

திடீரென ஒரு நாள் வளர்ப்பு மகனாக ஜெ. தத்தெடுத்துக் கொண்ட சுதாகரனின் திருமணம் சென்னை மந்தைவெளியில் உள்ள மறைந்த எம்.ஏ.எம். ராமசாமிக்கு சொந்தமான திறந்த வெளி நிலப்பரப்பில் நடந்தது. ஆடம்பரத்திற்கும் அதிகார வரம்பு மீறலுக்கும் 100 கோடி செலவில் நடத்தப்பட்டது என சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்வதற்கும் காரணமானது அந்த திருமணம். அந்தத் திருமணத்துக்கு பிறகு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் வந்தால் வீட்டு மனைகளாக விற்கப்படாமல் இருந்த பல ஏக்கர் நிலத்திற்கு ஒரே இரவில் வீட்டுமனைகளாக விற்கும் அங்கீகாரத்தை வழங்கினார் ஜெ. இப்பொழுது எம்.ஆர்.சி.நகர் என்ற பெயரில் ஒரு பெரிய நகரமாக உருவாகியுள்ள அந்த இடத்தில் பிரபல நட்சத்திர விடுதியான லீலா பேலஸ் ஹோட்டல் அமைந்துள்ளது. அங்கு திவாகரன் மகன் ஜெய்ஆனந்த் மற்றும் சுதாகரனின் சகோதரர் ஜெ.ஜெ.டி.வி. பாஸ்கரனின் மகள் ஜெயஸ்ரீ ஆகியோரின் திருமண வரவேற்பு நடைபெற்றது.

 

admk



வளர்ப்பு மகன் திருமணம் போல் ஆடம்பரம் இல்லாமல் மிக எளிமையாக நடந்த இந்தத் திருமண வரவேற்புக்கு அரசியல் கட்சி தலைவர்களும் பத்திரிகையாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். மறைந்த நடராஜனுக்கு நெருக்கமான பழ.நெடுமாறன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். சசிகலாவின் வழக்கறிஞர்களான நாமக்கல் செந்தில், அசோகன் ஆகியோர் வந்திருந்தனர். இவர்களுடன் சசிகலாவின் சொந்த பந்தங்களான இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தொடங்கி அனைவரும் வந்திருந்தனர். அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி. தினகரன், இளவரசி, மகன் விவேக் ஆகியோர் மட்டும் வரவில்லை.


மு.க.ஸ்டாலினை வாழ்த்தி ஒரு திருமண விழாவில் திவாகரன் பேசியதால் சசிகலா பரோலில் திருமணத்திற்கு வரவில்லை என செய்திகள் பறந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பெங்களூரு சிறையிலிருந்து ஒரு கடிதத்தை சசிகலா கொடுத்தனுப்பியிருந்தார். அந்த கடிதத்தை திவாகரனின் மகனும் ஜெ.வை அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி கவனித்த டாக்டரான ராஜமாதங்கியும் வாசிக்க முற்பட்டனர். அந்த கடிதத்தை வாங்கி திவாகரன் மௌனமாக படிக்க அதன்பின் அனைவரும் திவாகரன் பாணியிலேயே மௌனமாக படித்தனர். கடிதத்தில் மணமக்களை வாழ்த்தியதோடு "ஒரு காலத்தில் மன்னார்குடி குடும்பம் எப்படி ஒற்றுமையாக இருந்தது.

தற்பொழுது சிதறி கிடக்கிறது. மறுபடியும் குடும்பம் ஒன்று சேர வேண்டும்' என குறிப்பிட்டிருக்கார் சசி என்கிறது மன்னார்குடி வட்டாரம். விழாவுக்கு அ.தி.மு.க. அமைச்சர்கள் வெளிப்படையாக வராமல் அவர்களது குடும்ப உறுப்பினர்களை அனுப்பி திவாகரனிடம் அட்டென்டன்ஸ் போட்டிருக்கிறார்கள்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.