Skip to main content

சசிகலாவின் விசுவாசியான மர வியாபாரியைக் கட்சியில் சேர்த்த முதல்வர் எடப்பாடி..! எதிர்க்கும் அதிமுகவினர்!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

sessss

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமாக கொடநாட்டில் தேயிலை தோட்டம் உள்ளது. ஜெயலலிதா இறப்பதற்கு 6 மாதத்திற்கு முன்பு கொடநாடு தேயிலை தோட்டம் அருகே 600 ஏக்கரில் புதிதாக கர்சன் கிரீன் டீ தேயிலைத் தோட்டம் வாங்கப்பட்டது. இதை 'நக்கீரன்' மட்டுமே உலகிற்குச் சொல்லியது.

 

சசிகலாவின் விசுவாசியான கூடலூர் பகுதியைச் சேர்ந்த மர வியாபாரி சஜீவன் என்பவர் அ.தி.மு.க.வில் மிக முக்கியப் புள்ளியாக இருந்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு  எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரால் மர வியாபாரி சஜீவன் அ.தி.மு.க.வில் இருந்து அப்போது நீக்கப்பட்டார்.


கொடநாடு கொலைக் கொள்ளை வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் மரவியாபாரி சஜீவன் மற்றும் அவரது சகோதரன் ஆகியோரின் உத்தரவுப்படியே கொடநாடு கொலைக் கொள்ளையில் ஈடுபட்டோம் எனச் சொல்லினர். தற்போது இது குறித்த வழக்கு, உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

 

இப்போது மர வியாபாரி சஜீவனுக்கு அ.தி.மு.க.வில் மாநில அளவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சஜீவனையும், அ.தி.மு.க குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமுவையும் உடனடியாகக் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட அ.தி.மு.க மூத்த முன்னோடிகள், முன்னாள் இந்நாள் ஒன்றிய, நகரச் செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இணைந்து கோத்தகிரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை முன்பு வினோத ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

Ad

 

எதிர்வரும் 18ஆம் தேதி நீலகிரிக்கு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டவும் அ.தி.மு.க.வினர் தயாராகி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்