Skip to main content

செந்தில்பாலாஜி மீது பெண் பரபரப்பு புகார்!

Published on 11/05/2019 | Edited on 11/05/2019

இடைத்தேர்தல் அரவக்குறிச்சி தொகுதியில் நடக்கவிருக்கும் நிலையில் பெண் ஒருவர் புகார் ஒன்றை செந்தில் பாலாஜி மீது அளித்துள்ளார். கரூர் அருகே குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர், ராமலிங்கம். இவரது மனைவி தெய்வானை (62). இவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால், கோகுல் என்ற ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், ராமலிங்கம் கடந்த 16 வருடங்களுக்கு முன்பு காலமாகி விட்டார். இவர்களுக்கு  சொந்தமாக விவசாய நிலம், காலியிடம் என பல  கோடிக்கு மேல் சொத்து உள்ளதாக கூறப்படுகிறது. 

 

senthil balaji



கடந்த 2011-ம் ஆண்டு, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் சேர்ந்து கோகுலை கடத்திச்சென்று, குடும்பச் சொத்தை அபகரித்துவிட்டதாக அப்போது புகார் ஒன்று எழுந்தது. இது தொடர்பாக, கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண் ஒன்றில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு சம்மந்தமாக கோகுல் வாக்குமூலம் அளித்தால், அது செந்தில் பாலாஜிக்கு இடைதேர்தலில்  பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றனர். கோகுல், கடந்த சில வருடங்களாக கோவையில் தங்கி பணியாற்றி வருகிறார். அவரது மனைவியும் மகனும் அங்கேயே உடன் உள்ளனர். இதனிடையே, தனது தாயாரைப் பார்க்க கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி கரூருக்கு வந்துவிட்டுச் சென்றவர், அதன்பின் மாயமாகி விட்டதாக சொல்லப்படுகிறது. 

கோவை வீட்டிலும் இல்லை. இதுதொடர்பாக கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில், 'என் மகனை காணவில்லை' என தெய்வானை புகார் அளித்துள்ளார்.  இந்தப் புகாரின்மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடந்த 6-ம் தேதி ஆட்கொணர்வு மனு ஒன்றையும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தெய்வானை தாக்கல் செய்து இருக்கிறார். வழக்கு விசாரணையின்போது, 'தனக்கு எதிராக சாட்சியமளித்தால் பாதிப்பு ஏற்படும் எனக் கருதி, செந்தில் பாலாஜியும் அவரது ஆட்களும் தான் தனது மகனை கடத்தி வைத்திருக்க வேண்டும். எனவே, எனது மகனையும் எனது சொத்தையும் மீட்டுத்தர வேண்டும்' எனவும் கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்