Skip to main content

சரியும் பொருளாதாரம்: வேலைவாய்ப்புகளை காக்க ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தேவை! ராமதாஸ்

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

 

இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில், மோட்டார் வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி அப்பட்டமாக அனைவருக்கும் தெரிகிறது. வேலைவாய்ப்புகளை காக்க ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தேவை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

உலகின் மிகப்பெரிய சந்தையாகவும், 7-ஆவது பொருளாதார வல்லரசாகவும் திகழும் இந்தியா கடுமையான  பொருளாதார பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக விற்பனை சரிவு, வேலைவாய்ப்பு இழப்பு போன்றவை நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், நடுத்தர வர்க்கத்தினரும்,  தனியார் நிறுவன பணியாளர்களும் தங்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

 

ramadoss


 

இந்தியாவை 2024-ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாகவும், 2032-ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாகவும் உயர்த்தப்போவதாக மத்திய அரசு உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டிருக்கும் நிலையில், கள நிலையும், யதார்த்தமும் வேறுவிதமாக உள்ளன. இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில், மோட்டார் வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி அப்பட்டமாக அனைவருக்கும் தெரிகிறது.
 

இரு சக்கர வாகனங்களில் தொடங்கி மகிழுந்துகள், பேருந்துகள், சரக்குந்துகள் மற்றும் பல்வகை பயன்பாட்டு வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களின் விற்பனையும் கடந்த 9 முதல் 10 மாதங்களாக  கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதனால் டாட்டா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டார்ஸ், மகிந்திரா, மாருதி சுசுகி, டொயோட்டா, அசோக் லேலண்ட் ஆகிய நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைக்கும் வகையில், கடந்த சில வாரங்களில் 2 முதல் 9 நாட்களை பணியில்லாத நாட்களாக அறிவித்துள்ளன. டி.வி.எஸ். குழுமத்தின் லூகாஸ், சுந்தரம் & கிளேட்டன் நிறுவனங்களும் உதிரிபாகங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இனிவரும் நாட்களில் இந்த நிறுவனங்கள் இன்னும் அதிக பணியில்லாத நாட்களை அறிவிக்கக்கூடும். 
 

இந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் உதிரி பாகங்களை தயாரித்து வழங்கும் ஏராளமான  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் எந்த நேரமும் மூடப்படும் நிலையில் உள்ளன. வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் கடந்த சில வாரங்களில் மட்டும் 3 லட்சத்துக்கும் கூடுதலான பணியாளர்கள் வேலையிழந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் அடுத்த சில மாதங்களில் மேலும் 10 லட்சம் பேர் வேலையிழக்கும் ஆபத்து நிலவி வருகிறது. இதைப் போக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.


 

மோட்டார் வாகனத்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை, அத்துறையின் பின்னடைவாக மட்டும் பார்க்கக் கூடாது. இரு சக்கர வாகனங்கள், மகிழுந்துகள் ஆகியவற்றின் விற்பனை என்பது நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதார நிலையையும், சரக்குந்துகள், இழுவை ஊர்திகள் ஆகியவற்றின் விற்பனை தொழில்துறை மற்றும் வேளாண்துறையின் செழிப்பையும் காட்டும் பிரதிநிதித்துவங்கள் ஆகும். அந்த வகையில் மோட்டார் வாகனத்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு அனைத்துத் துறைகளிலும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதையும், நடுத்தர, உயர்நடுத்தர வர்க்கம் நெருக்கடியில் இருப்பதையும் காட்டுகிறது.
 

இந்தியாவின் தொழில்துறை உற்பத்திக்கு 40% பங்களிக்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு, உரம், எஃகுத்துறை, சிமெண்ட், மின்சாரம் ஆகிய 8 துறைகளின் வளர்ச்சி கடந்த ஜூன் மாதத்தில் 0.2% ஆக குறைந்து விட்டதில் இருந்தே தொழில்துறை எந்த அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது என்பதை அறியலாம். தொழில்துறையைக் கடந்து சேவைத்துறையின் முக்கிய அங்கமான மென்பொருள் நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு தொடங்கியுள்ளது. இத்தகைய நிலை நீடிக்குமானால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். அவற்றை நினைத்துப் பார்க்கவே மிகவும் அச்சமாக உள்ளது.
 

இந்தியப் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்து வருகிறது என்பதை மத்திய அரசும் உணர்ந்துள்ளது. பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக, ரிசர்வ் வங்கி மூலம் வங்கிகளின் வட்டி விகிதங்களை மத்திய அரசு குறைத்து வருகிறது. ஆனால், இது எதிர்பார்க்கும் அளவுக்கு பயனைத் தராது. ஏனெனில், இதன் பயன்கள் தொழில்துறையினரை சென்றடையவில்லை. கடந்த சில மாதங்களில் ரிசர்வ் வங்கி 1,10% அளவுக்கு வட்டியை குறைத்துள்ள நிலையில், பொதுத்துறை வங்கிகள் 0.15 முதல் 0.30% வரை  மட்டும் தான் வட்டிக்குறைப்பு வழங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, பொதுத்துறை வங்கிகள் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால், அவற்றால் பெரிய அளவில் கடன் வழங்க முடியாது. எனவே, நிதி சார்ந்த நடவடிக்கைகளால் வளர்ச்சியைத் தூண்ட முடியாது. இதை வல்லுனர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.


 

மாறாக, நுகர்வை அதிகரிக்கும் வகையிலான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலமாகத் தான் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க முடியும். கடந்த 2008-09 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் போது இத்தகைய நடவடிக்கைகள் தான் கை கொடுத்தன. இப்போதும் அதேபோன்று குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஊக்குவிப்பு சலுகைகளை அளித்தால் தான் இந்தியப் பொருளாதாரத்தின் மந்த நிலையைப் போக்கி, அனைத்துத் துறைகளையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது சாத்தியமாகும்.
 

மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைத்து அப்பொருட்களை அதிக அளவில் வாங்கச் செய்தல், ஏற்றுமதிக்கு சலுகைகளை அறிவித்து, அதிக அளவிலான பொருட்களை ஏற்றுமதி செய்ய வைத்து அன்னிய செலாவணியை ஈட்டுதல், உட்கட்டமைப்புத் துறையில் மிக அதிக அளவில் முதலீடு செய்வதன் மூலம் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்தல் உள்ளிட்ட ஊக்குவிப்பு சலுகைகள் தான் இன்றைய நிலையில் உடனடித் தேவையாகும். எனவே, அத்தகைய ஊக்குவிப்பு சலுகைகளை அறிவித்து, அனைத்து துறைகளுக்கும் புத்துயிரூட்ட மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.