
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர் செல்லபபாண்டியனுக்கு எதிராக விராலிமலை, அன்னவாசல், குண்றாண்டார்கோயில், கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த 14 ஒன்றியச் செயலாளர்களில் 12 க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடியுள்ளனர். மாவட்டச் செயலாளர் தங்களை மதிப்பதில்லை, தங்கள் பரிந்துரைகளை ஏற்பதில்லை, ஒப்பந்தங்களை தன்னிச்சையாக மற்றவர்களுக்கு கொடுக்கிறார், அவர் விருப்பத்திற்கு நிர்வாகிகளை நியமனம் செய்து தனி அணிகளை உருவாக்கி கோஷ்டி பூசல்களை உருவாக்கி வருகிறார் என்று பல குற்றச்சாட்டுகளை அடுக்கியவர்கள் அவரிடம் நேரில் சென்று கேட்பது அடுத்தகட்டமாக கட்சித் தலைமையிடம் முறையிடுவது என முடிவெடுத்தனர்.
இந்த செய்தி நக்கீரன் இணையத்தில் வெளியான நிலையில் இன்று கீரனூரில் அவரது வீட்டில் இருந்த மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியனை ஒன்றியச் செயலாளர்கள் சந்திரன், மாரிமுத்து, சத்தியசீலன், பாஞ்சாலன், பரமசிவம் உள்பட ஒன்றியச் யெலாளர்கள் சந்தித்த போது, ‘மாரிமுத்து, சத்தியசீலன் ஆகியோரை வெளியே போங்கள் என்னை பார்க்க ஏன் வந்தீங்க..’ என்று கோபமாக பேசியவர், ‘எனக்கு எதிராக எப்படி கூட்டம் போடலாம்..’ என்று ஒன்றியச் செயலாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசும் போது, ‘உங்களை எல்லாம் மாற்றச் சொல்லி தலைமை சொன்னது. நான் தான் மாற்றாமல் வைத்திருக்கிறேன்..’ என்ற போது காரசாரமான வாதம் நடந்துள்ளது. ‘இனிமேல் என்னைப் பார்க்க கட்சி அலுவலகம் தான் வரனும்..’ என்று கடிந்துள்ளார். இதனையடுத்து ஒன்றியச் செயலாளர்கள் 15 ந் தேதி மீண்டும் கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளரை சந்திப்பது அதன் பிறகு மீண்டும் ஒரு கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தி கட்சித் தலைமையை சந்திப்பது என்று முடிவெடுத்துள்ளனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் உள்கட்சி பூசலில் புதுக்கோட்டை சிக்கித் தவிப்பதால் உடன்பிறப்புகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.