Skip to main content

அடித்தட்டு மக்களுடைய சிரமங்களை புரிந்து கொள்ளாமலே உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருக்கிறார்கள்... ஈ.ஆர். ஈஸ்வரன் 

Published on 01/09/2020 | Edited on 01/09/2020
bus

 

 

அடித்தட்டு மக்களுடைய சிரமங்களை புரிந்து கொள்ளாமலே உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருக்கிறார்கள் என்று மத்திய மாநில அரசுகளை குற்றம் சாட்டியுள்ளார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றிலிருந்து பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கின்ற மாநில அரசு மாவட்டங்களுக்குள்ளே பொது போக்குவரத்தை அனுமதித்திருக்கிறது. ஆனால் மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் ஒரு மாவட்டத்திற்குள் ஒரு பேருந்தில் பயணித்து விட்டு மாவட்ட எல்லையில் இறங்கி அடுத்த மாவட்ட பேருந்தில் ஏறி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

இந்த சிரமம் பயணிக்கின்ற அடித்தட்டு மக்களுக்குதான் தெரியும். மாவட்டங்களுக்குள்ளே பயணித்தால் கரோனா பரவாது என்ற நிலைபாடும், அதே பேருந்து பக்கத்து மாவட்டத்திற்குள் நுழைந்தால் கரோனா பரவும் என்ற நிலைப்பாடும் புரிந்து கொள்ள முடியவில்லை.

 

உதாரணத்திற்கு கரூரிலிருந்து ஈரோடு வர வேண்டுமென்றால் மூன்று பேருந்துகள் மாறி வர வேண்டியிருக்கிறது. அதே சமயத்தில் பக்கத்து மாவட்டத்திற்குள் பயணிக்காமல் விவசாய வேலைக்கு செல்ல முடியாது. தொழிற்சாலைகளுக்கு செல்ல முடியாது. ஆயிரக்கணக்கான கட்டிட வேலை தொழிலாளர்கள் செல்ல முடியாது. வாழ்வாதாரத்திற்காக எல்லோரும் மாவட்ட எல்லைகளில் சிரமப்பட்டு பேருந்து மாறி பயணிக்கிறார்கள். அரசு இந்த சிரமத்தை புரிந்து கொண்டு மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும்.

 

வருமானத்திற்கு வழி இல்லாமல் குடும்பத்தில் சாப்பிடுவதற்கே சிரமப்பட்டு கொண்டிருக்கின்ற மக்களை மின்சார வாரியத்திற்கு கூடுதல் வைப்புத்தொகை கட்ட வேண்டுமென்று நிர்பந்திப்பது எந்த விதத்தில் நியாயம். தொழிற்சாலைகள் துவங்கப்பட்டு இப்போதுதான் ஆட்கள் வர ஆரம்பித்திருக்கிறார்கள். தயாரிக்கின்ற பொருட்கள் எப்போது விற்கும் என்று தெரியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மின்சார வாரியத்திற்கு வைப்புத்தொகையை அதிகமாக கட்ட வேண்டுமென்று வற்புறுத்துவதும் நியாயமில்லை. கரோனா பாதிப்பினால் ஏற்பட்ட பொருளாதார சரிவிலிருந்து எல்லோரும் மீள்கின்ற வரை மின்சார வாரியம் கூடுதல் வைப்பு தொகை வசூலிக்க கூடாது.

 

போக்குவரத்து துறை மிகவும் மந்தமான சூழலில் இருக்கிறது. தொழிற்சாலைகள் இயங்கவில்லை. எந்த வியாபாரமும் சரிவர நடக்கவில்லை. மக்கள் போக்குவரத்துக்கே அரசு இப்போதுதான் அனுமதித்திருக்கிறது. இப்போது தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணத்தை அதிகரித்து வாங்குவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது.

 

வாங்கிய கடனுக்கு மாதாந்திர தவணைகளை கட்ட கால அவகாசம் கொடுத்த அரசு இன்றைக்கு வட்டிக்கு வட்டி போட்டு தவணையை கட்ட கட்டாயப்படுத்துகிறது. மாத தவணை கட்டுவதற்கு இன்னும் ஆறு மாத காலம் கால அவகாசம் வேண்டும். கரோனா பாதித்த காலத்திற்கு வட்டி தள்ளுபடியும் அறிவிக்க வேண்டும்.

 

மொத்தத்தில் மத்திய, மாநில அரசுகள் அடித்தட்டு மக்களுடைய சிரமங்களை புரிந்து கொள்ளாமலே உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்கின்ற வகையில் பரிசீலித்து நடந்து கொள்ளுங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.