Skip to main content

“அதிமுகவை பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லாதவர் டிடிவி தினகரன்” - சி.வி. சண்முகம் காட்டம் 

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

cv sanmugam talk about ttv dhinakaran

 

ஜெயலலிதாவால் போயஸ் கார்டன் பக்கமே வரக்கூடாது என்று விரட்டி அடிக்கப்பட்ட தினகரன் எடப்பாடியை பார்த்து விமர்சிக்க கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர் என சிவி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

 

விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளரும் ராஜ்யசபா எம்.பியுமான சிவி.சண்முகம் நேற்று செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது, “தமிழக ஆளுநரிடம் உரிய ஆதாரங்களுடன் திமுக ஆட்சி குறித்து புகார் அளித்துள்ளோம். ஆனால் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் புகார் அளித்துள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நாங்கள் உரிய ஆதாரங்களுடன்தான் புகார் அளித்துள்ளோம். திமுக தலைவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு சொத்து சேர்ப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். முதல்வருக்கு ஆட்சியில் நடப்பது, கட்சியில் நடப்பது குறித்து கூட எதுவும் தெரியவில்லை. கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை. அமைச்சர்கள் முன்னுக்குப் பின் முரணாகக் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

 

அரசு கேபிள் டிவி கடந்த 10 நாட்களாக முடக்கப்பட்டுக் கிடக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு இரண்டு தனியார் டிவி சேனல்கள் இனிமேல் அரசு கேபிள் டிவி தெரியாது எங்கள் சேனல்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று விற்பனை செய்து வருகிறார்கள். இப்படி அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது.

 

டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி உடன் இருப்பவர்கள் அனாதையாகத்தான் போவார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர் டிடிவி தினகரன். ஜெயலலிதா தினகரனை போயஸ் கார்டன் பக்கமே வரக்கூடாது என்று விரட்டி அடித்தார். அப்படிப்பட்ட தினகரன் எடப்பாடியை பார்த்து விமர்சிக்க கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர். அவர் உட்பட கடந்த தேர்தலில் அவரது கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அவரை நம்பி சென்ற 18 எம்எல்ஏக்கள் தான் தற்போது நடு ரோட்டில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

 

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நான்காண்டு காலம் அதிமுக அரசு சிறப்பாக ஆட்சி செய்து மக்கள் திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. அதன் பயனாகத்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்தித்து 75 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று ஒரு பெரும் எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் பணியாற்றி வருகிறது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத தினகரன் அதிமுகவையும் எடப்பாடி பழனிசாமியை பற்றியும் பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லாத நபர். ஆளுநரை நாங்கள் சந்தித்தபோது தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவுக்கு  ஒப்புதல் வழங்குமாறு வலியுறுத்தி உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.