Skip to main content

“கடந்த அ.தி.மு.க. ஆட்சி களையாகத் தான் இருந்தது” - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

Published on 11/06/2025 | Edited on 11/06/2025

 

CM MK Stalin says The previous ADMK regime was a waste

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் வேளாண்மை - உழவர் நலத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை தமிழ்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். அதோடு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “உழவு என்பது தொழில் மட்டுமல்ல. அது நம்முடைய பண்பாடு. நிலத்தை ஐந்திணையாக பிரித்து வாழ்வியல் வகுத்த இனம் நம்முடைய தமிழினம்.

அந்த நிலத்தை எல்லா வகையிலும் நாம் வளப்படுத்தி உயர்த்த வேண்டும். வளமான நிலங்களிலும், பயிர்களுக்கு நடுவில் களைகள் முளைக்கும் என்பது விவசாயிகளான உங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படிப்பட்ட களையாக தான் கடந்த அ.தி.மு.க. ஆட்சி இருந்தது. எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு துரோகம் செய்த ஆட்சி அது. ஒவ்வொரு விஷயத்திற்கும் நீங்கள் (விவசாயிகள்) எப்படியெல்லாம் போராடினீர்கள் என்று சிறிது நினைத்துப் பாருங்கள். இன்றைக்கு அந்த நிலைமை மாறியிருக்கிறது. கடந்த ஆட்சியில், விவசாயிகளின் தற்கொலை அதிகமானது. உழவர்களின் உரிமையைப் பறிக்க முயன்ற மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் வெயிலிலும், மழையிலும் விவசாயிகள் போராடி அடக்குமுறையை எதிர்கொண்டனர்.

அப்போது, கூச்சமே இல்லாமல் அந்த சட்டங்களை ஆதரித்துப் பேசி, பச்சை துரோகம் செய்தவர்கள் அவர்கள் (அதிமுகவினர்). அதனால் தான் நீங்கள் தோற்கடித்தீர்கள். வேளாண் பெருங்குடி மக்களான உங்களை நான் கேட்டுக்கொள்வதெல்லாம், அதுபோன்ற களைகள், நாட்டிலிருந்து மொத்தமாக களையப்பட வேண்டும். உழவர் பெருங்குடி மக்களான உங்களுக்கு இன்னும் பல திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியில் வர இருக்கிறது. மீண்டும்  திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் அமையும். அதற்கு, உழவர்களைக் காக்கும் இந்த அரசுக்கு உழவர் பெருமக்கள் அனைவரும் உற்ற துணையாக இருக்க வேண்டும்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்