Skip to main content

தமிழக மீனவர்களின் 121 படகுகள் அழிக்கப்படுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! -ராமதாஸ்

Published on 09/11/2020 | Edited on 09/11/2020
ramadoss

 

 

தமிழக மீனவர்களின் 121 படகுகள் அழிக்கப்படுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 121 படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றங்கள் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் நோக்கம் கொண்ட இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

 

இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி போருக்கு பிறகு தமிழக மீனவர்கள் மீதான சிங்களப் படையினரின் அணுகுமுறை கடுமையானதாகவும், மனிதநேயமற்றதாகவும் மாறியுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி தமிழக மீனவர்களை கைது செய்து, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வரும் சிங்கள கடற்படை, மீனவர்களை விடுதலை செய்தாலும் படகுகளை  விடுவிக்க மறுத்து வருகிறது. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் தான் இப்போது அழிக்கப்படவுள்ளன.

 

இலங்கை நீதிமன்றங்களின் இந்த நடவடிக்கைகள் தேவையற்றவை; இரு நாட்டு மீனவர்களிடையே  தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை. இப்போது அழிக்க ஆணையிடப்பட்டுள்ள படகுகள் எந்த வழக்கிலும் சம்பந்தப்பட்டவை அல்ல. அவை ஏற்கனவே தமிழக மீனவர்களிடம் ஒப்படைப்பதற்காக விடுவிக்கப்பட்டவை. அவற்றை அழிக்க நீதிமன்றங்கள் ஆணையிட்டிருப்பது வீண் சிக்கலை உருவாக்கும்.

 

வங்கக்கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த 2014-ஆம் ஆண்டு வரை பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 42 படகுகள் அந்த ஆண்டின் இறுதியில் அவற்றின் உரிமையாளர்களிடம்  ஒப்படைக்கப்பட்டன. அதன்பின் 2015-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை பறிமுதல் செய்யப்பட்ட 94 படகுகள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலும், 37 படகுகள் மன்னார் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலும் வைக்கப்பட்டிருந்தன. இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் அப்படகுகளை தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்க கடந்த 2018-ஆம் ஆண்டின் இறுதியில் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் அனுமதி வழங்கின. அதன்படி கடந்த ஆண்டு இலங்கை சென்ற தமிழக மீனவர்கள் 10 படகுகளை மட்டும் மீட்டு வந்தனர். மீதமுள்ள படகுகளை சீரமைக்க வேண்டியிருந்ததால், அதற்கான பணியாளர்களை அழைத்து செல்ல சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது. அதற்குள் அடுத்தடுத்து பல சிக்கல்களும்,  இந்த ஆண்டின் தொடக்கத்தில் கரோனா பரவலும் ஏற்பட்டதால் படகுகளை மீட்டு வர முடியவில்லை.

 

இலங்கை அரசும், நீதிமன்றமும் ஒரு சில மாதங்கள் கால அவகாசம் கொடுத்து, அதற்குள்ளாக 121 படகுகளையும் எடுத்துச் செல்லும்படி ஆணையிட்டிருந்தால், இந்த பிரச்சனைக்கு  மிகவும் எளிதாக தீர்வு காணப்பட்டிருக்கும். ஆனால், தமிழக மீனவர்களின் நிலைப்பாடு குறித்து எதுவும் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து படகுகளை அழிக்க ஆணையிட்டிருப்பது தான் மீனவர்கள் தரப்பில் பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு படகின் மதிப்பும் பல கோடிகள்  இருக்கும். அந்த படகுகளை அழிப்பது மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிடும்.

 

இலங்கை நீதிமன்றங்களின் உத்தரவை நிறைவேற்றுவது யாருக்கும், எந்த வகையிலும் பயனளிக்காது.  தமிழக மீனவர்களின் 121 படகுகள் அழிக்கப்பட்டால் அது அப்பகுதியில் கடல் மேலும் மாசு அடையவே  வழி வகுக்கும். 121 படகுகளையும் அவர்களின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது தான் மிகவும் எளிமையான தீர்வு ஆகும். எனவே, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து படகுகளையும் சீரமைத்து எடுத்துச் செல்வதற்கு தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசும், நீதிமன்றமும் அவகாசம் வழங்க வேண்டும். இந்த அனுமதியை இலங்கையுடன் பேசி மத்திய, மாநில அரசுகள் பெற்றுத் தர வேண்டும்.

 

அதேநேரத்தில் இலங்கை துறைமுகங்களில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகள் சிதிலமடைந்த நிலையில் இருப்பதால் அவற்றை சீரமைத்து அங்கிருந்து எடுத்து வருவது மிகவும் சவால் நிறைந்ததாகும். அதற்கு பெரும் பொருட்செலவும் ஆகும் என்பதால், ஒவ்வொரு மீன்பிடி படகையும் சீரமைத்து எடுத்து வர ஒரு குறிப்பிட்ட தொகையை மானியமாக வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்” இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.