Skip to main content

“பணம் கொடுப்பதும் தெரியக்கூடாது; வாங்குவதும் தெரியக்கூடாது!” - ஆலோசனைக் கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஓபன் டாக்!

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

ADMK Minister rajendra balaji speech virudhunagar

 

விருதுநகர் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களின் சார்பாக, ஒரே நாளில் சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், விருதுநகர் மற்றும் திருச்சுழி ஆகிய 7 தொகுதிகளிலும், வாக்குச்சாவடி நிலை முகவர்களின் ஆலோசனைக் கூட்டத்தை அ.தி.மு.க நடத்தியிருக்கிறது.
 
சிவகாசி கூட்டத்தில் ‘மைக்’ பிடித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, “தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டோம். எதிரிகளை வெல்வதுதான் ஒரே லட்சியம். 276 பேர் பூத்தில் உட்காரப் போகின்றீர்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் குறைந்தபட்சம் 100 இளைஞர்களைச் சேர்க்க வேண்டும். மழை பெய்தால் ஈசல் எப்படி மொத்தமாக வருகிறதோ, அதுபோல அ.தி.மு.க கட்சி வெளிச்சத்தைப் பார்த்து, இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டே இருக்கிறார்கள். அ.தி.மு.க போல ஒரு கட்சி இந்தியாவிலேயே கிடையாது. 


தமிழர்கள், தமிழச்சிகள், யார் உதவி செய்தாலும், அந்த உதவிக்கு நன்றியுடையவர்களாக இருப்பார்கள். ஒருவருக்கு ரேசன் கார்டு வாங்கிக் கொடுத்தீர்களென்றால், தலைமுறைக்கும் நினைத்துப் பார்ப்பார்கள். ஓட்டுச் சேர்க்கும்போது, படித்த இளைஞர்கள் பேன்ட், சட்டை போட்டிருப்பீர்கள். பெண்களுக்கு, யார் ஓட்டு சேர்த்தார்களென்று தெரியாது. எந்தக் கட்சிக்காக ஓட்டு சேர்த்தார்களென்று தெரியாது. உங்களை அதிகாரி என்று நினைத்துவிடக்கூடாது. இரட்டை இலைக்கு ஒட்டு போடுங்க என்று சொல்லிச் சொல்லி ஓட்டு சேர்க்கவேண்டும். அதற்கான நிதியுதவிகள் உங்களிடம் வந்து சேரும்.


இந்த மாவட்டத்தில் அ.தி.மு.க எங்கே மீட்டிங் நடத்தினாலும், கிடா வெட்டி, மட்டன் சாப்பாடுதான். அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டு, அரசியல் பண்ணக்கூடிய இயக்கமென்றால், அது அதிமுகதான். தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சாப்பிட வைத்து, அவர்கள் சாப்பிட்ட பிறகு சாப்பிடக்கூடிய தலைவர்கள் உள்ள கட்சி அ.தி.மு.க. ஏழு தொகுதிகளிலுமே சாப்பாடு ரெடி பண்ணியிருக்கிறோம்.


நிர்வாகிகள், கிளைக்கழகச் செயலாளர்கள் என எல்லோரும் வந்திருக்கின்றீர்கள். இரண்டாயிரம் ரூபாய் வைத்த கவர், முதலில் நான் ஒரு 5 பேருக்கு, இப்போது கொடுத்துவிடுகிறேன். இங்கே வராதவர்களுக்கும், வீடு தேடிப்போய், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கவர் கொடுத்துவிடுவார்கள். 276 பேருக்கும் கவர் போய்ச் சேர்ந்துவிடும். இது ஒரு சாம்பிள்தான். இது ஒரு அடிப்படை. இது ஒரு ஆரம்பம். அடுத்தடுத்து நடக்கும் கூட்டங்களில், இந்தப் பணிகளை விரிவுபடுத்திச் செய்வோம். மண்டல கமிட்டி பொறுப்பாளர்கள் என்று, ஒவ்வொரு மண்டலத்துக்கும் மூன்று பேரை போட்டிருக்கிறோம். அந்த மூன்று பேருக்கும் ரூ.2,000 வீதம் கவர் கொடுத்துவிடுகிறோம். அவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருந்து வேலை செய்வார்கள். மண்டல கமிட்டிக்குள்ளேயே, கிளைச்செயலாளர்கள் இருப்பார்கள். அவர்கள்தான் கட்சியின் அடித்தளம். 


நான் ஒபனாகப் பேசுகிறேன். தற்போது தேர்தல் ஒன்றும் நடக்கவில்லை. பத்திரிகையாளர்கள் பதிவுகூட பண்ணிக்கொள்ளலாம். ஒண்ணும் பிரச்சனை கிடையாது. ஒண்ணும் கவலை கிடையாது. இதையெல்லாம், இப்போதுதான் பேச முடியும். தேர்தல் அறிவித்துவிட்டால், கொடுப்பது தெரியக்கூடாது; வாங்குவது தெரியக்கூடாது; எடுப்பதும் தெரியக்கூடாது. ரகசியக்கூட்டம், ரகசிய ஆலோசனை எல்லாம் பண்ணுவோம். எப்படி ஜெயிப்பது என்று நமக்குத் தெரியும்.

 

cnc

 
திமுகவில் யார் இருக்கிறார்கள்? களத்தில் ஆளே இல்லை. தற்போது பார்த்தீர்களென்றால், 7,000 பேருக்கு கவர் கொடுக்கிறோம். இந்த மாவட்டத்தில், தொகுதிக்கு 1,000 பேர். சில தொகுதிகளில் 1,200 பேர். 7,400 தொண்டர்கள் சேரக்கூடிய கட்சியாக, இந்த விருதுநகர் மாவட்டத்தில், வேறு எந்தக் கட்சி இருக்கிறது? ஒரு கட்சியும் கிடையாது. நேற்றுதான் சொன்னோம். அதுவும் ஃபோன் மூலம் தகவல். வாட்ஸ்-ஆப்பில் போகிறது. இன்றைக்கு காலை 8 மணிக்கே, மண்டபத்தில் கூட்டம் கூடிவிட்டது. திமுகவில் ஆளே கிடையாது, அது ஐம்பெரும் தலைவர்கள் நிரம்பிய கட்சி. ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 பேர் இருக்கிறார்கள். அவ்வளவுதான்! அந்தக் கட்சியினர், வடநாட்டுக்காரனை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்து ஓட்டு போடுவார்களா? மாய மந்திரமா? ஜீபூம்பா-ன்னு சொல்லி ஓட்டு விழுவதற்கு?  அதெல்லாம் திமுகவுக்கு ஒட்டு விழாது. பட்டனைத் தட்டினால் இரட்டை இலைதான் விழும்.

 

பீகாரில் காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்கும் என்றார்கள். ஜெயித்தது யார்? பி.ஜே.பி. நிதிஷ்குமார்தான் ஜெயித்தார். யாரெல்லாம் உழைக்கிறார்களோ? அவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுவாங்க. அரசியலை வைத்துப் பிழைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மக்கள் ஓட்டுப் போட மாட்டார்கள்.

 
நீங்கள் அனைவரும் உழைக்கவேண்டும். நான் இந்த விருதுநகர் மாவட்டத்துக்கு என்னவெல்லாம் கொடுத்திருக்கின்றேன். சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூரில் எல்லாம் அரசுக் கல்லூரிகள் வந்துவிட்டன. விருதுநகரில் மருத்துவக் கல்லூரி. அடுத்து பல் மருத்துவக் கல்லூரியும் வரப்போகிறது. சுகாதாரத்துறை செயலாளரிடம், அமைச்சரிடம் பேசிக்கொண்டே இருக்கிறேன். இந்த மாவட்டத்தில் எல்லா சாலைகளும் சரிசெய்யப்பட்டுவிடும். கிராமச் சாலைகளுக்கும் பட்டியல் எடுத்துச் செய்து கொண்டிருக்கிறோம். 50 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள், இரண்டு மாதத்திற்குள் சிவகாசி டவுணில் முடிக்கப்பட்டுவிடும்.

  
சிவகாசி நகராட்சிக்கு புதுக் கட்டிடம். திருத்தங்கல் நகராட்சிக்கு புதுக் கட்டிடம். எல்லா யூனியன்களுக்கும் கட்டிடம் கட்டி திறந்துவிட்டோம். எவ்வளவோ கொண்டு வந்திருக்கிறோம். தி.மு.க ஆட்சியில் இந்த விருதுநகர் மாவட்டத்துக்கு என்ன செய்தார்கள்? இரண்டு முன்னாள் அமைச்சர்கள் வாய்கிழியப் பேசுகிறார்கள். கே.கே.எஸ்.எஸ்.ஆரும், தங்கம் தென்னரசுவும் என்ன பண்ணினார்கள்? அவர்களின் தொகுதிக்குள் ஒரு அரசுக் கல்லூரி கொண்டுவர முடிந்ததா?  எதுவும் செய்யாமல், ஏமாற்றி ஓட்டு வாங்க நினைக்கக்கூடாது.   

 

nkn

 

இங்கே அமர்ந்திருக்கும்  ‘அப்பு’ என்னை தர்காவுக்கு கூட்டிச்செல்வார். நான் நெற்றியில் குங்குமத்துடனும், கையில் காப்பு கட்டிய கயிறுடனும் செல்வேன். குங்குமத்தை அழித்துவிட்டு வாருங்கள் என்று அவர்களும் சொல்ல மாட்டார்கள். நானும் அழிக்க மாட்டேன். மாதா கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு போவார்கள். அங்கும் அப்படித்தான். என்னுடைய நம்பிக்கையில் உறுதியாக இருப்பேன். அதே நேரத்தில், மற்றவர்களின் நம்பிக்கையோடு இணைந்து செயல்படுவேன். என்னைப்போய், அவர்களுக்கு எதிரி, இவர்களுக்கு எதிரி என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள். இஸ்லாமிய ஓட்டு, கிறிஸ்தவ ஓட்டு மட்டுமல்ல. பவுத்த ஓட்டும்கூட திமுகவுக்கு கிடைக்காது. திமுகவுக்கு யார் ஓட்டு போடுவார்களென்றால், வாடி, வதங்கி, நொந்து நூலாகி, சாகின்ற வரையிலும் திமுகவுக்கே ஓட்டுப் போடுவோம் என்று நினைப்பவர்கள் மட்டும்தான் போடுவார்கள். சிந்திக்கிற திமுகவினரும் அதிமுகவுக்கே ஓட்டுப் போடுவார்கள். 


ஸ்டாலின் நடிக்கிறார்; நாடகம் போடுகிறார். அண்ணா உருவாக்கிய தி.மு.க கலைஞர் இருந்தபோது இல்லை. கலைஞரிடம் இருந்த தி.மு.க, தற்போது ஸ்டாலினிடம் இல்லை. அப்படியென்றால் தி.மு.க எங்கே இருக்கிறது? பத்துக்கு பத்து அறைக்குள், கம்யூட்டர் ரூமுக்குள் கச்சிதமாக இருக்கிறது. மேக்கப் போட்டு நடிக்கிற ஸ்டாலினின் நடிப்பு தமிழகத்தில் எடுபடாது. இது எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக. அம்மா வளர்த்த கட்சி. யாராலும் அழிக்க முடியாது.” என்று பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.