Skip to main content

‘நாங்கள் தயார்’ - 138வது ஆண்டையொட்டி காங்கிரஸ் எடுத்த முக்கிய முடிவு

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
We are ready"-Congress starts the campaign!

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் தோல்வியையடுத்து, டெல்லியில் கடந்த 21ஆம் தேதி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அடுத்தாண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலையொட்டி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாகப் பொறுப்புகளில் மாற்றம் செய்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நடவடிக்கை எடுத்திருந்தார். அதன்படி, உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்த பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டார். அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக அவினாஷ் பாண்டே நியமிக்கப்பட்டார் அதேபோல், ஆந்திரா, அந்தமான் நிகோபார் பகுதி காங்கிரஸ் பொறுப்பாளராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டார். மேலும், பல முடிவுகளை காங்கிரஸ் எடுத்து வருகிறது.

இதனிடையே, அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணிய உருவாக்கி ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நாளை (28-12-23) முதல் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளது. காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு நாளை முதல் 138ஆம் ஆண்டை காங்கிரஸ் நிறைவு செய்யவுள்ளது. இந்த தினத்தையொட்டி, வருகிற 2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்த ‘நாங்கள் தயார்’ என்ற பெயரில் நாக்பூரில் நாளை (28-12-23) காங்கிரஸ் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. நாக்பூரில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மற்றும் காங்கிரஸ் முதலமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். 

சார்ந்த செய்திகள்