Skip to main content

"நாட்டின் 60 சதவீத பேரின் குரல்கள் அவமானப்படுத்தப்பட்டது" - எதிர்க்கட்சிகளின் பேரணிக்கு பிறகு ராகுல் காந்தி!

Published on 12/08/2021 | Edited on 12/08/2021

 

rahul gandhi

 

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நாளைவரை (13.08.2021) நடைபெறவிருந்த நிலையில், பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து முடக்கிவந்ததால், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை மத்திய அரசு நேற்றோடு முடிவுக்கு கொண்டுவந்தது.

 

இதனைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே பேரணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தும் பதாகைகளையும், பெகாசஸ் குறித்து விசாரணை நடத்தக் கோரும் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

 

பேரணியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "நாடாளுமன்றதிற்குள் பேச அனுமதிக்கப்படாததால், உங்களிடம் (ஊடகங்களிடம்) பேசவந்துள்ளோம். நாடாளுமன்றதிற்குள் பேச அனுமதிக்கப்படாதது ஜனநாயகப் படுகொலை. மாநிலங்களவையில் எம்.பிக்கள் முதன்முறையாக தாக்கப்பட்டுள்ளனர்; தள்ளிவிடப்பட்டுள்ளனர். சபாநாயகர் தான் வருத்தப்படுவதாகக் கூறுகிறார். ஆனால், சபையை சுமுகமாக நடத்துவது அவரது பொறுப்புதானே? அதை ஏன் அவரால் செய்ய முடியவில்லை?" என கேள்வியெழுப்பினார்.

 

தொடர்ந்து அவர், "நாடளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்துவிட்டது. ஆனால் நாட்டின் அறுபது சதவீதம் பேரைப் பொறுத்தவரை, நாடாளுமன்றம் நடைபெறவில்லை. நாட்டின் அறுபது சதவீத குரல்கள் நேற்று நசுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டன" என தெரிவித்தார்.

 

பேரணியில் கலந்துகொண்ட சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், "நாடாளுமன்றத்தில் தங்களது கருத்துக்களை முன்வைக்க எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பெண் எம்.பிக்களுக்கு எதிரான நேற்றைய சம்பவம் ஜனநாயகத்திற்கு எதிரானது. பாகிஸ்தான் எல்லையில் நாங்கள் நிற்பது போன்று இருந்தது" என கூறினார்.

 

பொது காப்பீடு வர்த்தக தேசியமயமாக்கல் திருத்த மசோதாவை மத்திய அரசு மாநிலங்களவையில் நிறைவேற்றியபோது, சபாநாயகர் இருக்கைக்கு அருகே அமளியில் ஈடுபட்ட பெண் எம்.பிக்களை அவை பாதுகாவலர்கள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளதும், தன்னுடைய 55 வருட நாடாளுமன்ற வாழ்க்கையில் சக பெண் எம்.பிக்கள் தாக்கப்படுவதைப் பார்த்ததில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

அமேதி தொகுதியில் மீண்டும் போட்டி?; மெளனம் கலைத்த ராகுல் காந்தி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Rahul Gandhi broke the silence and answered Re-contest in Amethi constituency?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலுக்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (03-04-24) வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. .

இதற்கிடையில், அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டாக சேர்ந்து நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது, ராகுல் காந்தியிடம், அமேதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “இது பாஜகவின் கேள்வி, மிகவும் நல்லது. கட்சித் தலைமையிடம் இருந்து எனக்கு எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் பின்பற்றுவேன். எங்கள் கட்சியில், இந்த வேட்பாளர்களின் தேர்வு முடிவுகள் அனைத்தும் காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டத்தில் எடுக்கப்படுகின்றன” என்று கூறினார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.