Skip to main content

அரசு விழாவில் பழங்குடியின மக்களை தரையில் அமர வைத்து அவமதிப்பு!

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

Tribal people are insulted by sitting on the ground at a government function

 

பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் விழா நேற்று (15-11-23) கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிர்சா முண்டாவின் உருவச் சிலைக்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உள்பட மத்திய அமைச்சர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்படி, பிர்சா முண்டாவின் பிறந்த இடமான ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, பழங்குடியினர் பெருமை தின விழா கொண்டாட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். 

 

அந்த வகையில், புதுச்சேரி மாநிலத்தில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாகப் பழங்குடியினர் பெருமை தின விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பழங்குடியினர் பெருமை தின விழா கொண்டாட்டத்தைக் காணொளி வாயிலாகப் புதுச்சேரியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

 

பழங்குடியினர் மக்களை கவுரவிக்கும் விழாவுக்கு புதுச்சேரியில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து பழங்குடியின மக்கள் அழைத்து வரப்பட்டனர். ஆனால், அவர்கள் அமர்வதற்கு நாற்காலி இல்லை. மேலும், அவர்கள் ஆங்காங்கே நின்று கொண்டும், தரையில் அமர்ந்து கொண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது அங்கு இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பழங்குடியின விடுதலை இயக்க மாநிலச் செயலாளர் ஏகாம்பரம், “15 ஆண்டுகளாக எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவிகளும் செய்யவில்லை. பழங்குடியின பெருமை தின விழா மேடையில், ஒரு பழங்குடியின மக்கள் அமர்வதற்கு இருக்கை வசதிகள் கூட ஏற்பாடு செய்யாதது ஏன்? என்று ஆளுநரிடமும், முதல்வரிடமும் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

அப்போது தமிழிசை செளந்தரராஜன், அதிகாரிகளை அழைத்து பழங்குடியின மக்கள் அமர்வதற்கு இருக்கை வசதிகள் மற்றும் மதிய உணவிற்கு ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார். அதன் பிறகு, அரங்கத்திற்குள் பிளாஸ்டிக் நாற்காலி கொண்டுவரப்பட்டு அவர்கள் அமர வைக்கப்பட்டனர். இதனால், இந்த நிகழ்ச்சியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அரசு விழாவில் பழங்குடியின மக்கள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என்பதால் விழா ஏற்பாடுகளில் சம்பந்தப்பட்டுள்ள துறைத் தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு தமிழிசை செளந்தரராஜன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.