Skip to main content

"பிரெசிடென்ட் அங்கிள்! எனது அம்மாவை மன்னித்துவிடுங்கள்..." - உருக வைக்கும் சிறுவனின் வேண்டுகோள்!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

shabnam ali's son heart melting appeal to president of india

 

உத்தரப்பிரதேச மாநிலம் பாவன்கேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சப்னம் அலி. பள்ளி ஆசிரியையாக இருந்த இவர், சலீம் என்ற கூலித் தொழிலாளியைக் காதலித்து வந்துள்ளார். அதன்மூலம் கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு சப்னம் அலியின் வீட்டார் சம்மதிக்கவில்லை. இதனால் ஏழு வார கர்ப்பிணியான சப்னம் அலி, தனது குடும்பத்தினருக்குப் பாலில் மயக்க மருந்தைக் கலந்துகொடுத்து அவர்களின் கழுத்தை அறுத்து, கொடூரக் கொலையைச் செய்துள்ளார். தனது பெற்றோர், சகோதரர்கள், சகோதரரின் 10 வயது மகன் உள்ளிட்ட ஏழு பேரை இவ்வாறு கொலை செய்துள்ளார் சப்னம் அலி.

 

இதனைத் தொடர்ந்து சப்னம் அலி மற்றும் அவரது காதலன் சலீம் ஆகியோருக்கு நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, சப்னம் அலி அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கும், பிறகு உச்சநீதிமன்றத்திற்கும் சென்றார். அங்கும் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்தார். அதுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை தூக்கிலிடுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இந்தநிலையில் சப்னம் அலியை மன்னிக்குமாறு அவரது 12 வயது மகன் முகமது தாஜ் கோரிக்கை விடுத்துள்ளான். மேலும் குடியரசுத்தலைவர் தனது அம்மாவை மன்னிப்பார் என நம்புவதாகவும் அந்தச் சிறுவன் கூறியுள்ளான்.

 

தற்போது முகமது தாஜை பத்திரிகையாளர் ஒருவர் வளர்த்து வருகிறார். முகமது தாஜ் ஒரு சிலேட்டில், "பிரெசிடென்ட் அங்கிள் ஜி, எனது அம்மா சப்னமை தயவு செய்து மன்னித்து விடுங்கள்" என ஆங்கிலத்தில் எழுதி, தனது தாயாரை மன்னிக்குமாறு குடியரசுத் தலைவரை கேட்டுக் கொண்டுள்ளான். சிறுவனின் இந்தச் செயலைக் கண்டு பலரும் மனம் உருகி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.