Skip to main content

"மத்திய அரசின் அறிவிப்புக்குப்பின் தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கான தளர்வுகளை அறிவிப்போம்"- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி!

Published on 15/04/2020 | Edited on 15/04/2020


புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று  (14/04/2020) மாலை காணொளி காட்சி மூலம்  செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்குத் தொலைகாட்சி மூலம் ஆற்றிய உரையில், கரோனா தொற்று தாக்கத்தைத் தடுக்க நாடு முழுவதும் மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளார். 'ஏப்ரல் 20- ஆம் தேதி வரை விதிகள் கடுமையாகப் பின்பற்றப்படும், மக்கள் தனிமையில் இருக்க வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்' எனப் பல்வேறு விதிமுறைகளையும் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதை நாம் கடைப்பிடிப்போம். மத்திய அரசு அறிவிப்புக்குப்பின், தொழிற்சாலைகள், மற்ற நிறுவனங்களுக்கான தளர்வுகளை அறிவிப்போம்.


கட்டுப்பாடுகளினால் சிரமம் இருந்தாலும் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மே 3- ஆம் தேதி வரை விழிப்புடன், தனித்திருக்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்தபடி வெளியில் செல்ல வேண்டும். அப்படி இருந்தால்தான் புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பரவாமல் காக்க முடியும்.
 

 

puducherry cm narayanasamy press meet coronavirus


மத்திய அரசின் திட்டத்தின் கீழ் புதுச்சேரி மக்களுக்கு 5 கிலோ அரிசி விநியோகம் செய்வதில் மிகப்பெரிய குழப்பம் இருக்கிறது. இது சம்மந்தமாக முதல்வர், அமைச்சர்களிடம் கலந்து பேசாமல் அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்பட்டு அரசுப் பேருந்துகளைக் கொண்டு அரிசியை விநியோகிக்க முயற்சித்தனர். அப்படி செய்தால் பல நாட்களாகும். எனவே தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி லாரிகள் மூலம் அரிசியை ஏற்றிச் சென்று, ஒரு வாரத்துக்குள் சிவப்பு அட்டைதாரர்களுக்கு அரிசியைக் கொடுத்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். 

அதே போல மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் அரிசி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்களின் கஷ்டத்தை உணர்ந்து அதிகாரிகள், பணியாளர்கள் வேகமாகச் செயல்பட வேண்டும். குறிப்பாக ரேஷன் கடை ஊழியர்கள் வேலை செய்யத் தயாராக இருந்தாலும், நிர்வாகத்தில் உள்ள முட்டுகட்டைகள் காரணமாக எங்களால் செயல்படுத்த முடியவில்லை. 
 

http://onelink.to/nknapp


கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட அரியாங்குப்பம், சொர்ணா நகர் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து இன்றுடன் (14/04/2020) நிறைவடைவதால் அப்பகுதிகளில் இன்று முதல் கட்டுப்பாட்டு விதிமுறைகள் தளர்த்தப்படும். கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடைய வாழ்வாதாரத்தைக் காக்க எங்களால் முடிந்தவரை உதவி செய்து வருகிறோம். மத்திய அரசு நிதி கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம்." இவ்வாறு புதுச்சேரி முதல்வர் தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.