Skip to main content

“வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது...” - பிரதமர் மோடி வேதனை

Published on 13/06/2025 | Edited on 13/06/2025

 

 Prime Minister Modi anguish Gujarat plane crash

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து  242 பேருடன் லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் நேற்று (12.06.2025) மதியம் இன்ஜின் செயல் இழப்பால் விமானம் புறப்பட்ட 5வது நிமிடத்திலேயே விபத்தானது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணித்த 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 229 பயணிகள் என மொத்தம் 241 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். 

பயணிகளில் 169 இந்தியர்கள், இங்கிலாந்தைச் சேர்ந்த 53 பேர், போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த 7 பேர் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஒருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதில், குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 14 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். விமானம் வானிலேயே செயலிழந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் அந்த பகுதியில் இருந்த மருத்துவ கல்லூரியின் மாணவர்களின் விடுதி பலத்த சேதமடைந்துள்ளது. இந்த விமான விபத்தில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. விமான விபத்து தொடர்பான வீடியோ காட்சிகளும் புகைப்படங்களும் வெளியாகி காண்போரை பதற வைத்துள்ளது.

இந்த நிலையில், விமான விபத்து நடந்த பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (13-06-25) ஆய்வு நடத்தினார். விபத்து நிகழ்ந்த இடத்தில் நடந்து வரும் மீட்பு பணிகளை அவர் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களையும் அவர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், விமான விபத்தில் இருந்து உயிர் பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 38 வயதான ரமேஷ் விஸ்வாஸை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

 Prime Minister Modi anguish Gujarat plane crash

அதனை தொடர்ந்து, அகமதாபாத் விமான விபத்து மற்றும் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக அகமதாபாத் விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில், தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது, “அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தால் நாம் அனைவரும் நொருங்கி போயுள்ளோம். இதயத்தை உடைக்கும் வகையில் பல உயிர்களை இழந்தது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. கற்பனை செய்ய முடியாத துயரத்தில் அன்புக்குரியோரை இழந்தவர்களுடன் எங்கள் எண்ணம் இருக்கிறது. அவர்களை இழந்து வாடும் அனைத்து குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் வலியை புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களுக்கு நாம் துணை நிற்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்