Skip to main content

பிரதமர் மோடியிடம் கவலை தெரிவித்த குடியரசு தலைவர்!

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

PM MODI - RAM NATH KOVIND

 

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று பஞ்சாபில் சாலை வழியாக பயணம் செய்தபோது, போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை  இரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். பிரதமர் சென்ற கார் மறைக்கப்பட்டது பாதுகாப்பு குறைபாடு என மத்திய அரசும், பாஜக உள்ளிட்ட கட்சிகளும் பஞ்சாப் அரசை விமர்சித்து வருகின்றன.

 

அதேநேரத்தில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்படவில்லையென்றும், அவர் பங்கேற்கவிருந்த கூட்டத்திற்கு கூட்டம் சேராததால், அவர் திரும்பி சென்றதாக கூறினார். இதற்கிடையே பிரதமர் செல்லும் பாதை மறிக்கப்பட்டிருப்பது குறித்து எஸ்.பி.ஜிக்கு (சிறப்பு பாதுகாப்பு குழு) தெரியாமல் போனது எப்படி?, பாகிஸ்தானையொட்டியுள்ள ஒரு மாநிலத்தில் 100 கிலோமீட்டர் தொலைவு வரை பிரதமரை காரில் பயணிக்க எஸ்.பி.ஜி அனுமதித்தது எப்படி? என பலர் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

இதற்கிடையே பஞ்சாப் அரசு, பிரதமர் பயணம் செய்த் வழி மறிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. இந்தநிலையில் பிரதமர் மோடி, இன்று குடியரசு தலைவரை சந்தித்து பஞ்சாபில் தான் பயணித்த வழி மறிக்கப்பட்ட சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் அந்த சம்பவம் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக குடியரசு தலைவர் மளிகை, "குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடியை இன்று ராஷ்டிரபதி பவனில் சந்தித்து பஞ்சாபில் வாகன அணிவகுப்பில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து நேரில் கேட்டறிந்தார். இந்த தீவிர பாதுகாப்பு குறைபாடு குறித்து குடியரசு தலைவர் கவலை தெரிவித்தார்" என பதிவிட்டுள்ளது.

 

அதேபோல் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "குடியரசு தலைவரை சந்தித்தேன். அவரது அக்கறைக்கு நன்றி. எப்போதும் வலிமையின் ஆதாரமாக இருக்கும் அவரது நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்